கரையும் தன்மை, கரையாத் தன்மை என இருவித நார்ச்சத்தை வெண்டைக்காய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெண்டைக்காயில் கொழகொழப்புமிக்க தன்மை ரத்தத்தில் கொழுப்புத்தன்மை மற்றும் பித்த நீர் அதிகரிக்கா வண்ணம் அவற்றை ஈரலின் துணை கொண்டு கட்டுப்படுத்துகிறது.
வெண்டைக்காயிலுள்ள வழவழப்புப்பொருள் பெருங்குடலின் உட்பகுதியில் பதிந்து பெருங்குடலின் செயலைச் செம்மைப்படுத்துகிறது. இயந்திரத்துக்கு எண்ணெய் இடுவதுபோல இது பெருங்குடலுக்கு ஒரு எண்ணெய் போல பயன் தருகிறது.
வெண்டைக்காயிலுள்ள வழுவழுப்பான திரவம் கொழுப்புச் சத்தையும் உணவிலுள்ள நச்சுப்பொருள்களையும், பித்த நீரையும் கட்டுப்படுத்தி வெளியேற்ற வல்லது. இதனால் குடலில் ஏற்படுகிற பல்வேறு நோய்கள் தவிர்க்கப்படுகிறது.
வெண்டைக்காய் மூட்டுக்களில் ஏற்படும் தேய்மானத்தையும், மூட்டுத் தேய்வால் ஏற்பட்ட காயத்தையும் குணப்படுத்தி மூட்டுக்கள் சரிவர இயங்குவதற்கு உபயோகப்படுகிறது. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மை குடலின் உட்பகுதியில் படிந்து குடல் புண்ணாகாமல் பாதுகாப்பதோடு புண்களையும் ஆற்றுகிறது.
வெண்டைக்காய் நூரையீரல் வீக்கத்தையயும், மூச்சு விடுவதில் சிரமத்தையும் தணிக்க வல்லது. மேலும் தொண்டைக்கட்டு, தொண்டைப்புண்களையும் ஆற்ற வல்லது. கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களை தணிக்க வல்லதாக வெண்டைக்காய் உள்ளது.
அதுமட்டுமின்றி ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோயைத் தணிக்கக் கூடியது. வெண்டைக்காயை அன்றாடம் உணவில் சேர்ப்பதால் ரத்த நாளங்கள், நரம்புகள் வீக்கம், அடைப்பு ஆகியவை வராமல் தடுப்பதோடு வந்த பின்னும் குணப்படுத்தவல்ல மருந்தாக பணி செய்யும்.
வெண்டைக்காயில் உள்ள மருத்துவ வேதிப்பொருள்கள் முடி போன்ற சிறுசிறு ரத்த நாளங்களை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி தோல் மென்மையும் பளபளப்பும் பெறுகிறது.