Home உலகம் எபோலா மருத்துவர்கள் ஆண்டின் சிறந்த மனிதர்கள் – டைம் வார இதழ் தேர்வு

எபோலா மருத்துவர்கள் ஆண்டின் சிறந்த மனிதர்கள் – டைம் வார இதழ் தேர்வு

569
0
SHARE
Ad

ebolaநியூயார்க், டிசம்பர் 12 – எபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக அமெரிக்காவின் பிரபல “டைம்’ வார இதழின் ஆசிரியர் குழு அறிவித்துள்ளது.

ஓராண்டு காலத்தில், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதரை “ஆண்டின் சிறந்த மனிதராக’ “டைம்’ பத்திரிகை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது.

1927-ஆம் ஆண்டு முதல் இவ்வாறு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தனியொரு நபரைத் தேர்ந்தெடுக்காமல், எபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் புகைப்படங்களைத் தங்களது வார இதழ் அட்டையில் இடம்பெறச் செய்துள்ளது டைம் பத்திரிகை.

#TamilSchoolmychoice

ஆண்டின் சிறந்த மனிதர்’ என்ற ஒரே செய்தி தொடர்பாக டிசம்பர் 22 தேதியிட்ட இதழுக்கு 5 விதமான அட்டைப்படங்களை வடிவமைத்து டைம் பத்திரிகை புதுமை படைத்துள்ளது.

இந்நோய்க்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் போராடி வரும் நிலையில், சிலரின் படங்களையாவது அட்டையில் வெளியிடத் தீர்மானித்தோம் என்று இதழ் தொகுப்பாசிரியர் ராதிகா ஜோன்ஸ் கூறினார்.

மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் அமைந்துள்ள சியரா லியோன், லைபீரியா, கினீ நாடுகளில், டிசம்பர் மாத தொடக்க அளவில், எபோலா நோயால் சுமார் 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 6,000 பேர் உயிரிழந்தனர்.

நோய் பாதிப்புள்ளவர்கள் குறித்து அறிய 6,000 மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, பல நாடுளைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அந்நாடுகளில் முகாமிட்டுள்ளனர்.

இவர்களில், நவம்பர் மாத இறுதியளவில், 592 பேருக்கு எபோலா நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிய வந்த நிலையில், 340 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, ஆன்லைன் முறையில் வாசகர்கள் தேர்ந்தெடுத்த “ஆண்டின் சிறந்த மனிதர்’ பற்றிய முடிவுகள் திங்கள்கிழமை (டிச.8) வெளியாகியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாசகர்களால் ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது.