Home இந்தியா 2013-ல் தாவூத் இப்ராகிம்மை இரகசியமாக குறி வைத்த இந்தியாவின் ரா அமைப்பு!

2013-ல் தாவூத் இப்ராகிம்மை இரகசியமாக குறி வைத்த இந்தியாவின் ரா அமைப்பு!

655
0
SHARE
Ad

புது டெல்லி, டிசம்பர் 15 – நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா முயற்சி மேற்கொண்டதாகவும், கடைசி நேரத்தில் மிக முக்கிய தலைமையிடமிருந்து தொலைபேசி உத்தரவு வரவே அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Dawood Ibrahim
தாவூத் இப்ராகிம்

கடந்த 1993–ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிம், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளான்.

இதனால் கடந்த 2003–ம் ஆண்டு அவனை அமெரிக்கா அனைத்துலக  தீவிரவாதியாக அறிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தும் தொழிலிலும் அவன் ஈடுபட்டு வருகிறான்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவது தெரிய வந்தது. அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல ஆண்டுகளாக பாகிஸ்தானை, இந்திய அரசு கேட்டு வருகிறது. எனினும், தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிம்மை, சுட்டுக் கொல்ல இந்திய உளவு அமைப்பு ‘ரா’ (RAW) ரகசிய திட்டம் ஒன்றை 2013-ம் வகுத்தது. தாவூத் இப்ராகிம்மை குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ‘சூப்பர் பாய்ஸ்’ (Super Boys) என்று பெயரிடப்பட்டது.

9 பேர் கொண்ட அந்த குழு, பாகிஸ்தானுக்குள் சென்று தாவூத் இப்ராகிமின் நடவடிக்கையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்தது.

கடந்த 2013 -ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம்மிற்கு நாள் குறிக்கப்பட்டது. கராச்சியின் கிளிப்டன் சாலையில் உள்ள வீட்டில் தாவூத் மிகவும் பாதுகாப்பாக வசித்து வந்தான்.  அங்கு அவனை சுட்டுத் தள்ள சூப்பர் பாய்ஸ் குழு முடிவெடுத்தது.

தாவூத் இப்ராகிம்மை சுட்டுத்தள்ள சில நிமிடங்கள் இருக்கையில், நாட்டின் மிக முக்கிய தலைமை இடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அந்த உத்தரவின் பேரில் தாவூத்தை கொல்லாமல் வீரர்கள் திரும்பிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உத்தரவை வழங்கிய தலைமை யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.