Home இந்தியா ஜெயலலிதா வழக்கு: பவானி சிங்கை மாற்றக் கோரிய க.அன்பழகன் மனு ஏற்பு!

ஜெயலலிதா வழக்கு: பவானி சிங்கை மாற்றக் கோரிய க.அன்பழகன் மனு ஏற்பு!

607
0
SHARE
Ad

Jayalalithaaகர்நாடகா, ஜனவரி 9 – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக் கோரி தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் அவரது வழ‌க்கறிஞர் தாமரைச்செல்வன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானிசிங் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், அவரை நீக்கிவிட்டு புதிய வழ‌க்கறிஞரை நியமிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் அகமது முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த‌து. அப்போது அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், “சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது. இவ்வழ‌க்கில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு வெளியானதால், அவரின் பணிக் காலம் நிறைவடைந்தது.

bhawani-sing-anbzhagan0-600கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராக இதுவரை கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை மட்டுமே அவரை அரசு வழக்கறிஞராக தொடர ஆணை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு இல்லை. எனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை உடனடியாக இவ்வழக்கிலிருந்து நீக்க வேண்டும்” என்றார் நீதிபதி எஸ்.அப்துல் நசீர்.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி அகமது நஷீர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி வாய்ந்த வழக்கறிஞரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, பவானி சிங் தொடர்பாக கர்நாடக மாநில அரசு வரும் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி அகமது நஷீர் உத்தரவிட்டார்.

இதனிடையே உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இன்றும் நடைபெற்றது. ஜெயலலிதா தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் பி.குமார் தனது வாதங்களை நான்காவது நாளாக முன்வைத்தார்.