Home நாடு தகுதி நீக்கம் செய்யப்படும் வரை அன்வாரே எதிர்க்கட்சித் தலைவர்: லிம் குவான் எங்

தகுதி நீக்கம் செய்யப்படும் வரை அன்வாரே எதிர்க்கட்சித் தலைவர்: லிம் குவான் எங்

474
0
SHARE
Ad

Anwar ibrahimஜோர்ஜ் டவுன், பிப்ரவரி 12 – பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அதிகாரபூர்வமாக தகுதி நீக்கம் செய்யப்படும் வரையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார் என ஐசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

அரச மன்னிப்பு கோரி அன்வார் மனுத் தாக்கல் இன்னும் செய்யவில்லை என்றாலும் கூட, தண்டனை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து பிப்ரவரி 23ஆம் தேதி வரை அன்வார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க முடியும் என்றார் லிம் குவான் எங்.

“கடந்த திங்கட்கிழமை அன்வார் சிறை செல்லும் முன் அவருடன் விவாதித்தேன். அப்போது பேசப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது. கூட்டரசு அரசியல் சாசனத்தின்படி ஒருவர் தண்டனை விதிக்கப்பட்ட காலத்திலிருந்து 14 நாட்களுக்கு பிறகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட முடியும். மாமன்னரிடம் அரச மன்னிப்பு கோரும் வரையில் அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார். அவரது மனுவை நிராகரிக்கும் வகையில் எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதை மாமன்னர் நிறுத்தி வைப்பார். எனினும் அன்வார் விஷயத்தில் அரச மன்னிப்பு கோருவாரா இல்லையா என்பது அவரது முடிவை பொருத்தது,” என்றார் லிம் குவான் எங் (படம்).

#TamilSchoolmychoice

Lim Guan Engகடந்த 1998ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் தமக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மலாக்கா மன்னிப்பு வாரியம் தனது மனுவை நிராகரிக்கும் வரையில் சுமார் ஓராண்டு காலம் வரை கோத்தா மலாக்கா எம்.பி., பதவியில் தாம் நீடித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐசெக குறி வைப்பதாக வெளியான தகவலை அறவே மறுத்த அவர், பெர்மாத்தாங் பாவ் தொகுதி காலியாக இருப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிக்கும் வரை இடைத்தேர்தல் குறித்து பேசப் போவதில்லை என்றார்.

“எங்களைப் பொறுத்தவரை சிறையில் இருந்தாலும் பக்காத்தானின் தலைவர் அன்வார் தான். அடுத்த தலைவர் யார் என்பது குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை. பக்காத்தான் தலைவர்கள் ஆணையக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது,” என்று லிம் குவான் எங் மேலும் தெரிவித்தார்.