Home நாடு தேசியத் தலைவருக்கு போட்டியிடுவது முன்பே திட்டமிடப்பட்டதல்ல – டாக்டர் சுப்ரா

தேசியத் தலைவருக்கு போட்டியிடுவது முன்பே திட்டமிடப்பட்டதல்ல – டாக்டர் சுப்ரா

440
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 6 – தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மஇகாவில் தற்போது நிலவி வருவது அதிகாரப் போராட்டம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், தலைமைத்துவ நெருக்கடிதான் நிலவுகிறது என்றும் கூறினார்.

“கட்சியில் உள்ள பெரும்பாலானோர் ஒரு மாற்றத்தைக் காண விரும்புகின்றனர். ஏனெனில் கட்சியின் தற்போதைய நிலை அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனவே அதிகாரத்தை கைப்பற்றும் விருப்பம் என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல.”

#TamilSchoolmychoice

Dr-S.-Subramaniam

“மஇகாவில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான காரணம். இதன் வழி மஇகாவில் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் கிடைக்காமல் தேசிய முன்னணி பின்னடைவைக் கண்டது எனும் நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதுமே எங்கள் நோக்கம்,” என்றார் டாக்டர் சுப்ரமணியம்.

டத்தோஸ்ரீ பழனிவேல் முன்பே உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் கட்சியில் இந்தளவு பிரச்சினை வெடித்திருக்காது என்று குறிப்பிட்ட அவர், பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்துடன் கூட்டப்பட்ட பல கூட்டங்களுக்கு பழனிவேல் வரவில்லை என்றார். பிரதமருடனான சந்திப்புக்கும் கூட பழனிவேல் வரவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.

மறுதேர்தல் நடத்த வேண்டும் என சங்கப் பதிவிலாகாவின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருப்பது பழனிவேலின் சொந்த முடிவு என்றும் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும் குறிப்பிட்ட டாக்டர் சுப்ரமணியம், நீதிமன்றத்தை அணுக கட்சி அவருக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்றார்.

தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலில் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டாக்டர் சுப்ரமணியம், “கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடம் கிடைத்துள்ள ஆதரவு எனக்கு ஊக்கமளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக நடப்பு தேசியத் தலைவர் எவ்வாறு செயல்பட்டார், என்ன செய்தார் என்பதை உற்று நோக்கி அனைத்து கிளை உறுப்பினர்களும் வாக்களிப்பர்,” என்று தெரிவித்தார்.