Home நாடு மஇகா: 2009 -2013 மத்திய செயலவைக் கூட்டங்கள் இரண்டும் இன்று நடைபெறுகின்றன.

மஇகா: 2009 -2013 மத்திய செயலவைக் கூட்டங்கள் இரண்டும் இன்று நடைபெறுகின்றன.

332
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 12 – இன்று மஇகா தலைமையகம் இரண்டு தரப்பு மஇகா அணியினரின் ஆதரவாளர்களின் முற்றுகைக்கு ஆளாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

MIC Building with Palanivelகாரணம், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அணியினர், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2009ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவையின் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

அதற்கு முன்பாக  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு டாக்டர் சுப்ரமணியம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளார். அந்த சந்திப்பின்போது, இன்று 2009ஆம் ஆண்டின் மத்திய செயலவையை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

பழனிவேலுவின் மத்திய செயலவைக் கூட்டம்

இதற்கிடையில் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையின் கூட்டத்தை நடத்துவதற்கு நடப்பு மஇகா தேசியத் தலைவர் பழனிவேல் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் நம்பத்தகுந்த மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

2013இல் மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் தனக்கு செல்பேசி குறுஞ்செய்தி மூலம் கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அழைப்பை டத்தோ எஸ்.சோதிநாதன் அனுப்பியுள்ளார் என்றும் செல்லியலிடம் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டின் மத்திய செயலவையின் கூட்டம் என்றால், அந்த மத்திய செயலவையில் உதவித் தலைவராக இருக்கும் சோதிநாதன் எவ்வாறு  கூட்டத்தைக் கூட்ட முடியும் – அந்த மத்திய செயலவையின் தலைமைச் செயலாளர்தானே கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.

articless-subramaniam1-020713_600_398_100அப்படியானால், பழனிவேல் கூட்டும் 2013 மத்திய செயலவைக்கு இப்போது யார் தலைமைச் செயலாளர் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

மஇகா – சங்கப் பதிவிலாகா இரண்டு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள், சர்ச்சைகள் காரணமாக இரண்டு வழக்குகள் தற்போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளன. இந்த வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 16ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது.

இதற்கிடையில் இரண்டு தரப்புகளும் தங்களின் ஆதரவு மத்திய செயலவையைக் கூட்டியுள்ளன.

பழனிவேல் நடத்தவிருக்கும் கூட்டத்தில் 2009 மத்திய செயலவை உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்புகள் விடுக்கப்படவில்லை என்பதை 2009 மத்திய செயலவை உறுப்பினர்கள் ஓரிருவர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டு தரப்பினரின் மத்திய செயலவைகளும் ஏறத்தாழ ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெறவிருப்பதால், இன்று மஇகா தலைமையகம் மிகுந்த பரபரப்புடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு தரப்பு ஆதரவாளர்களும் பெருமளவில் இன்று மஇகாவில் திரளுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.