ஜெர்மனியின் முக்கிய விமான நிறுவனமான லுப்தான்சாவின் விமானிகள், ஓய்வூதிய பயன்கள் தொடர்பாக விமான நிறுவனத்துடன் கடந்த சில மாதங்களாக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் அவ்வபோது வேலை நிறுத்த போராட்டங்களை அறிவிப்பர். இந்நிலையில் நேற்றும் ஓய்வூதிய கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
போராட்டத்தின் முதற்கட்டமாக, உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்கப்பட வேண்டிய 750 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 80 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்றும் போராட்டம் தொடர்வதால் நீண்ட தூர விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிய வருகிறது.
எனினும் லுப்தான்சாவின் துணை நிறுவனங்களான ‘ஜெர்மன்விங்ஸ்’ (Germanwings), ‘யூரோவிங்ஸ்’ (Eurowings) மற்றும் ‘ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ்’ (Austrian Airlines) விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.