மதுரையில் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தலைமை வகித்து வைகோ பேசியதாவது; “மேற்கு தொடர்ச்சிமலை மனித இனம் தோன்றியதற்கு முன்பே பிறந்த பழமையானது. இதை புராதன சின்னமாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அறிவித்தது”.
“அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான பொட்டிபுரம் அம்பரப்பர் மலை மிகவும் பழமையானது. கடும் பாறைகளால் நிரம்பியது. மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க யுனஸ்கோவும், கஸ்தூரி ரங்கன் அறிக்கையும் வலியுறுத்துகிறது”.
“உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் 10 கி.மீ., தொலைவிற்கு உட்பட்டு எவ்வித சேதமும் விளைவிக்கக்கூடாது. ஆனால் அம்பரப்பர் மலைக்கு 2.3 கி.மீ., அருகிலுள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது”.
“பாறைகளை தகர்க்க வெடி வைக்கும்போது 50 கி.மீ., தொலைவில் உள்ள முல்லை பெரியாறு அணை, 30 கி.மீ., தொலைவில் உள்ள கேரளாவின் இடுக்கி அணைக்கு பேராபத்து உள்ளது. நியூட்ரினோவிற்கு மாசு கட்டுப்பாடு வாரியம், வன பாதுகாப்பு அமைப்பினர் அனுமதி வழங்கவில்லை”.
“இதை கட்டாயம் நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கான நிர்ப்பந்தத்தை தமிழக முதல்வருக்கு மத்திய அரசு ஏற்படுத்தும். அதற்கு தமிழக முதல்வர் பணிந்து விடக்கூடாது. தமிழகத்தை விடுத்து வேறு மாநிலங்களில் இதை நிறைவேற்ற விடுவார்களா” என்றார் வைகோ.