Home நாடு தந்தையின் நல்லடக்கம் முடிந்து சிறை திரும்பினார் அன்வார்!

தந்தையின் நல்லடக்கம் முடிந்து சிறை திரும்பினார் அன்வார்!

412
0
SHARE
Ad

காஜாங், ஏப்ரல் 5 – இன்று தனது தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சரின் சிறப்பு அனுமதி பெற்று சிறையிலிருந்து வெளிவந்த அன்வார் இப்ராகிம் மகனுக்குரிய தனது கடமைகளை முடித்த பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்குத் திரும்பினார்.

Anwar in front of Father body

தனது தந்தையாரின் நல்லுடலின் முன்பு சோகத்துடன் அமர்ந்திருக்கும் அன்வார் (டுவிட்டர் படம்) 

#TamilSchoolmychoice

பிற்பகலில் மயானக் கொல்லைக்கு சிறை பாதுகாவலர்களோடு கொண்டு வரப்பட்ட அன்வார் அங்கு நல்லடக்கச் சடங்குகள் முடிந்த பின்னர், குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் பிரியாவிடை வழங்க, சிறைச்சாலைக்குரிய வாகனத்தில் ஏற்றப்பட்டு சுங்கை பூலோ சிறைச்சாலைக்குப் புறப்பட்டார்.

முன்னதாக, மயானக் கொல்லையில் சவக்குழியின் அருகில் அமர்ந்து இறுதிச் சடங்குகளுக்கு உரிய காரியங்களை அன்வார் நிறைவேற்றினார்.

Anwar Prays at Father's funeral

தனது தந்தையாரின் இறுதிச் சடங்குகளின் போது தொழுகையில் ஈடுபட்டிருக்கும் அன்வார் (டுவிட்டர் படம்)

அன்வாரின் தந்தையாரின் நல்லுடலை ஏந்திய வாகனம் வீட்டிலிருந்து புறப்பட்ட வேளையில் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த அன்வார் இப்ராகிமை நெருக்கத்தில் பார்ப்பதற்கும், கைகொடுப்பதற்கும் கூட்டம் முண்டியடித்தபோது சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது அவருடன் உடன்வந்த சிறைப் பாதுகாவலர்கள் அவரைச் சுற்றி நின்று பாதுகாப்பு வழங்கினர்.

மயானக் கொல்லையிலிருந்து அன்வார் சிறைச்சாலைக்குப் புறப்பட்டபோது, வழக்கமாக அவருக்கு ஆதரவாக ஒலிக்கும் ‘ரிஃபோர்மாசி’ (reformasi), ‘லாவான் தெத்தாப் லாவான்’ (lawan tetap lawan) போன்ற முழக்கங்கள் அவரது ஆதரவாளர்களிடமிருந்து ஒலித்தன.