பிரான்ஸ் நாட்டு வரலாற்றிலேயே முதன் முதலாக 76 வயதான கிளாட் டானி என்ற நபருக்கு செயற்கையாக இதயம் பொருத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் மாதத்தில் நடைபெற்ற இந்த சிகிச்சையின் தொடக்கத்தில் அவர் ஆரோக்கியமாகவே காணப்பட்டார்.
ஆனால், செயற்கை இதயத்தில் இருந்த சில கோளாறுகளால் 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, செயற்கை இதயத்தில் சில மாற்றங்களை செய்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 69 வயதுடைய ஒருவருக்கு செயற்கையான இதயம் பொருத்தப்பட்டது.
இவரை சமீபத்தில் பரிசோதித்த மருத்துவர்கள், முதல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபரை விட, இவர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து, அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், பிறரை போல் ஒரு நாளில் சுமார் 15 முறை தன்னால் உடம்பை வளைத்து பணி செய்ய முடிவதாகவும், கூடிய விரைவில் இரண்டு சக்கர வாகனத்தில் கூட பயணம் செய்ய உள்ளதாக உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
செயற்கை இதயத்தில் பொருத்தப்பட்டுள்ள மிருதுவான உயிரியல் (biomaterials) எனப்படும் இயந்திர உறுப்பானது, இரத்தம் உறையும் அபாயத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியால் தவிர்க்கப்படும் ரத்தத்தின் அளவையும் இந்த செயற்கை இதயம் சமன் செய்யும்.
லித்தியம் பேட்டரிகளால்(Lithium Batteries) இயங்கும் இந்த இயந்திரம், இயற்கையான இதயத்தை போல் நொடிக்கு நொடி துடித்து ரத்தத்தை உடல் முழுக்க கொண்டு செல்ல உதவும்.
சமீபத்திய புள்ளி விபரத்தின் படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் சுமார் ஒரு லட்சம் நோயாளிகள் செயற்கை இதயம் பொருத்தவுள்ளார்கள் என்றும் இவர்களில் 20 நோயாளிகளை அடுத்தக்கட்ட சிகிச்சையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.