Home நாடு “திரைப்படக் கண்காட்சி இந்தியத் திருவிழாவின் மகுடம்” – இந்தியத் தூதர் திருமூர்த்தி உரை

“திரைப்படக் கண்காட்சி இந்தியத் திருவிழாவின் மகுடம்” – இந்தியத் தூதர் திருமூர்த்தி உரை

476
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – கடந்த மார்ச் மாதம் தொடங்கி, எதிர்வரும் ஜூன் மாதம் வரையில், கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியத் திருவிழாவின் முக்கிய அங்கமாக இந்தியத் திரைப்படக் கண்காட்சி இன்று தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கியது.

பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இந்தக் கண்காட்சியை மலாயாப் பல்கலைக் கழகத்தில் உள்ள சேன்சரி கட்டிடத்தில் (Chancery Building) அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.

#TamilSchoolmychoice

IMAG2476

இந்தியத் தூதரின் உரை

நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இந்தியத் திரைப்பட விழாவைத் தொடக்கி வைக்க பிரதமரின் துணைவியார் மிகவும் பொருத்தமானவர், காரணம் பாலிவுட் படங்களைத் தொடர்ந்து பின்பற்றி பார்த்து வருவதோடு இல்லாமல், இந்தியா-மலேசியா இடையில் கலை – பண்பாடு தொடர்புகள் வளரவேண்டும் என உண்மையிலேயே பாடுபட்டு வருபவர் அவர் என வர்ணித்தார்.

இந்தியத் திருவிழா நிகழ்ச்சிகளின் தொடரின் ஒரு முக்கிய அங்கமாக – மகுடமாக – இந்த திரைப்படக் கண்காட்சி நடைபெறுகின்றது என்றும், பல இந்திய மொழிகளில் வெளிவரும் இந்திய சினிமாக்களை இயன்றவரையில் ஒருங்கிணைத்து, அனைத்து திறன்களையும், வரலாற்றையும் ஒருமுகப்படுத்தி இந்த கண்காட்சிக்குள் பார்வையாளர்களுக்காக தாங்கள் கொண்டு வந்துள்ளதாக திருமூர்த்தி தனது உரையில் கூறினார்.

இந்த கண்காட்சியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு தந்த மலாயாப் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட திருமூர்த்தி, இஸ்லாமிய எழுத்து வடிவங்கள் தொடர்பான கண்காட்சியும் ஏற்கனவே மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருவதாகவும், அடுத்து நடைபெறப் போகும் ‘டிஜிட்டல் இந்தியா’ கண்காட்சியும் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்திலேயே நடைபெறப் போவதாகவும் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 1,000 திரைப்படங்களைத் தயாரித்து, உலகிலேயே மிகப் பெரிய சினிமாத் தொழிலைக் கொண்டுள்ள நாடாகத் திகழ்வது இந்தியா, எனக் குறிப்பிட்ட திருமூர்த்தி, இந்திய சினிமா பல கனவுகளை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த திரைப்படக் கண்காட்சியின் வெற்றிக்குத் துணை புரிந்த அனைவருக்கும், தனது தூதரக அதிகாரிகளுக்கும் தனது நன்றியையும் திருமூர்த்தி தெரிவித்துக் கொண்டார்.