Home உலகம் ராஜபக்‌சேவிற்கு 18 பில்லியன் டாலர் சொத்துக்கள் வெளிநாட்டில் உள்ளது – இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர!

ராஜபக்‌சேவிற்கு 18 பில்லியன் டாலர் சொத்துக்கள் வெளிநாட்டில் உள்ளது – இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர!

465
0
SHARE
Ad

mangalaகொழும்பு, மே 8 – இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபசேவின் குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட நிதி மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார். ராஜபக்சேவின் குடும்பத்திற்குச் சொந்தமான வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறிய மங்கள சமரவீர,

அதனடிப்படையில் ராஜபசே குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்டது என்று வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த சொத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து அதனை மீளப்பெறுவதற்கு இலங்கை அரசு நான்கு நாடுகளின் உதவியை நாடியுள்ளதாகவும் சமரவீர கூறினார். இந்த சொத்துக்களை கண்டுபிடிப்பது மிகக்கடினமான ஒரு காரியமென்று கூறிய அமைச்சர் சமரவீர,

லிபியத் தலைவர் கடாபி மரணமடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவருக்குச் சொந்தமான வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 80 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களில் இதுவரை 3.4 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை கண்டுபிடித்து அவற்றை மீளப்பெறுமாறு பொதுமக்கள் தற்போதைய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக கூறிய மங்கள சமரவீர, அதனை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயங்காது என்றும் கூறினார்.

ஆனால் இவரது இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக அண்மையில் ஊடக அறிக்கையொன்றை விடுத்திருந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்திருந்தார்.

தனக்கோ, தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ சொந்தமான சொத்துக்களோ இரகசிய வங்கிக்கணக்குகளோ வெளிநாடுகளில் இல்லை என்று தெரிவித்த ராஜபசே, தன் மீதும் தனது குடும்ப உறுப்பினர்கள் மீதும் அவதூறு பரப்புவதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தற்போதைய அரசால் சுமத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.