Home இந்தியா ஜெயலலிதா போட்டியிட உள்ள ஆர்.கே.நகர் தொகுதி- ஜூன் 27 இடைத்தேர்தல்

ஜெயலலிதா போட்டியிட உள்ள ஆர்.கே.நகர் தொகுதி- ஜூன் 27 இடைத்தேர்தல்

549
0
SHARE
Ad

சென்னை, மே 26 – முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இன்று முதலே அத்தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

jayalalithaaஅண்மையில் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை. அவர் அடுத்த 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறைத்தண்டனை காரணமாக அவரது எம்.எல்.ஏ., பதவியும், முதல்வர் பதவியும் பறிபோனது. எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ததில், அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற நிலையில், அவர் இடைத்தேர்தலை சந்திக்க வசதியாக ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் அத்தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா களமிறங்குவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ஆர்.கே.தொகுதியில் எதிர்வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 10 ஆகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாள் ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் என்றும், மனுக்களைத் திரும்பப்பெற ஜூன் 13 கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 27ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இந்த வாக்குகள் ஜூன் 30ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.