கோலாலம்பூர், ஜூன் 30 – சர்ச்சையாகி இருக்கும் மஇகா விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க முனைந்த பிபிபி தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் ஓர் உறுப்பினரை நீக்கும் அதிகாரம் சங்கப் பதிவகத்திற்கு இல்லை என்றும், கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் மட்டுமே ஓர் உறுப்பினர் தனது உறுப்பியத்தை இழப்பார். மாறாக, மற்ற தரப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் தனது உறுப்பியத்தை இழக்கமாட்டார் என்றும் சில கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
டத்தோ முருகையா பதில் அறிக்கை
இதனைத் தொடர்ந்து முன்பு பிபிபி கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், தற்போது மஇகாவில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவருமான டத்தோ டி.முருகையா கேவியசுக்குப் பதில் கொடுத்துள்ளார்.
“நம் கண் முன்னே நிகழ்ந்தவற்றையும், வரலாற்றையும் மறந்துவிட்டுப் பேசுவது சரியல்ல என்றும் அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார். மஇகா விவகாரத்தில் சங்கப் பதிவகம் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்கப் போவதாகப் பிரதமரே அறிவித்துள்ளதை டான்ஸ்ரீ கேவியஸ் உட்பட அனைவருமே நினைவில் கொள்வது நல்லது” என்றும் முருகையா நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நஜிப், தெங்கு அட்னான் கருத்துக்களைக் கவனியுங்கள்
பிபிபி விவகாரத்திலும் சங்கப் பதிவகம் கடந்த காலங்களில் முடிவெடுத்தது
“அச்சமயம் சங்கப் பதிவகத்தின் உத்தரவு டான்ஸ்ரீ கேவியசுக்கு நியாயமாகப் பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து அவரால் சிலர் நீக்கப்பட்டது செல்லும் என்றும் சங்கப் பதிவகம் அப்போது அறிவித்தது. அன்று சங்கப் பதிவகம் இவ்வாறு உத்தரவிட்டதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் டான்ஸ்ரீ கேவியஸ். ஆனால் இப்போது மஇகா விவகாரத்தில் மட்டும் சங்கப் பதிவகம் பிறப்பித்த உத்தரவு சரியல்ல என்று அவர் கூறுவதை ஏற்க இயலாது” என்றும் கேவியசின் முரண்பாடுகளை முருகையா சுட்டிக்காட்டியுள்ளார்.
தோழமைக் கட்சிகள் விவகாரத்தில் தலையிடாதீர்கள்
“சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் கொண்டிருந்த சங்கப் பதிவகத்திற்கு இப்போது மட்டும் திடீரென அந்த அதிகாரம் இல்லை என டான்ஸ்ரீ கேவியிஸ் சொல்ல முற்படுகிறாரா? கடந்த காலத்தில் இதே சங்கப்பதிவகத்தின் உத்தரவின் பேரிலேயே தானும் பிபிபி தலைவராகப் பொறுப்பேற்றதை டான்ஸ்ரீ கேவியஸ் மறந்துவிட்டாரா?” எனவும் முருகையா கேள்வி எழுப்பியுள்ளார்.
சங்கப் பதிவகம் நியாயமான முறையில் செயல்படுகிறது எனப் பிரதமரும் உறுதியாக நம்புகிறார் என்பதை அவரது அண்மைய அறிவிப்பில் இருந்து தெளிவாக உணர முடிவதாகக் கூறியுள்ள அவர், கடந்த கால சம்பவங்களை வசதியாக மறந்துவிட்டு, சங்கப் பதிவக உத்தரவுகள் தொடர்பில் யாரும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.