Home Featured நாடு காலிட் நோர்டின் : “வங்காளதேச தொழிலாளர்களால் பிரச்சினைகள் ஏற்படாது என்பதை உறுதி செய்க!”

காலிட் நோர்டின் : “வங்காளதேச தொழிலாளர்களால் பிரச்சினைகள் ஏற்படாது என்பதை உறுதி செய்க!”

653
0
SHARE
Ad

பாசிர் கூடாங் – வங்கதேசத்தில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவதை ஜோகூர் மாநில அரசாங்கம் எதிர்க்கவில்லை என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ முகமட் காலிட் நோர்டின் (படம்) தெரிவித்துள்ளார். எனினும் அத்தொழிலாளர்களால் சமூக, பொருளாதார ரீதியாக சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

khaled-nordinமுறையான அனுமதி பெற்ற, அனுமதி பெறாத தொழிலாளர்கள் மிக அதிக அளவில் இருப்பது தங்களுக்கு ஒருவித அசௌகரியமான உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்கள் அதிருப்தி வெளியிட்டிருப்பதாக காலிட் கூறினார்.
நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளைக் கொண்ட உற்பத்தி மையமாக விளங்குவதால் ஏகப்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் புழக்கத்தில் உள்ள பாசீர் கூடாங் நகர்தான் தாம் இவ்வாறு குறிப்பிடுவதற்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் கோடிகாட்டினார்.

“இம்மாவட்டத்தில் சமூக ரீதியில் சில விவகாரங்களை அத்தொழிலாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர். சிங்கப்பூரில் என்ன நடக்கிறது என்பதில் இருந்து நாம் கற்க முடியும். எனவே பெரிய சிக்கலாக உருவெடுப்பதற்குள் நாம் பிரச்சினையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துபவர்களுக்கும் அந்நியத் தொழிலாளர்களுக்கும் சில வழிகாட்டி நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச தகுதி உடைய தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிட வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும். உள்நாட்டினர் தொழிற்சாலைகளில் பணி செய்ய குறைந்தபட்சம் எஸ்பிஎம்மில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அத்தகுதியைக் கொண்டிருத்தல் வேண்டும். ஒரே வீட்டில் பத்து, இருபது தொழிலாளர்களைத் தங்க வைப்பதைக் காட்டிலும் தொழிலாளர்களை விடுதிகளில் (ஹாஸ்டல்) தங்க வைக்க வேண்டும்” என்று காலிட் வலியுறுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

பாசீர் கூடாங்கில் நிகழ்ந்த சில மோதல்களில் அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவற்றைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா சம்பவத்தைப் போல் மோசமான நிகழ்வுகள் உள்நாட்டிலும் ஏற்படக் கூடும் என அவர் மேலும் எச்சரித்தார்.