Home கலை உலகம் தயாரிப்பாளர் சங்க அலுவலகப் பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க அலுவலகப் பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது

884
0
SHARE
Ad
விஷால் – கோப்புப் படம்

சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 2.20 நிலவரம்) தமிழ்த் திரைப்படச் சங்கத் தயாரிப்பாளர் சங்கத்தில் நடப்பு சங்கத் தலைவர் விஷாலுக்கும் அவரது எதிர்த் தரப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து நேற்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்த ஜே.கே.ரித்திஷ் தலைமையிலான ஒரு குழுவினர் அந்த அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டு பூட்டினர்.

விஷால் மீது 7 கோடி ரூபாய் பண மோசடி புகாரையும் இந்த எதிர்த் தரப்புக் குழுவினர் காவல் துறையிலும், சங்கங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு தனது குழுவினருடன் வந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், போடப்பட்டிருக்கும் பூட்டு திருட்டுப் பூட்டு என்றும், அதைத் தாங்கள் திறக்கப் போவதாகவும் அங்கு காவலில் இருந்த காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

#TamilSchoolmychoice

எனினும் காவல் துறை அதிகாரிகள் பூட்டை உடைத்துத் திறக்க அனுமதி மறுத்துவிட்டனர். பதிவாளர் வந்தால்தான் திறக்க முடியும் என்று காவல் துறையினர் உறுதியாகக் கூறிவிட்டனர்.

நீண்ட நேரம் நடைபெற்ற வாக்குவாதங்களைத் தொடர்ந்து இறுதியில் அரசாங்கக் காவல் துறையினரின் கடமைக்கு இடையூறு செய்ததாக விஷாலும் அவரது குழுவினரும் கைது செய்யப்பட்டு, ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு வந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

-செல்லியல் தொகுப்பு