முதல் பாதியில் வெள்ளந்திச் சிரிப்பால் வியக்க வைக்கும் அஜித், இரண்டாம் பாதியில் கள்ளச் சரிப்பால் கலங்கடிக்கிறார்.
உடல் எடை சற்று அதிகமாகத் தெரிந்தாலும், அந்தக் கதாப்பாத்திரத்தின் ஆக்ரோஷத்திற்கு சரியாகப் பொருந்துகிறது.
‘ஆலுமா டோலுமா’ பாடலில் இதுவரையில் இல்லாத வகையில் மிகவும் ஸ்டைலாக அசத்தலாக அஜித் ஆடியுள்ளார். அஜித் நடனம் பிடிக்காதவர்களுக்குக் கூட இந்தப் பாடலில் இருந்து அவரது ஸ்டைல் பிடித்துப் போகும்.
குறிப்பாக வேதாளமாக வரும் அஜித்தின் ஸ்டைல் அசத்தல்.. இக்கட்டான சூழலில் அஜித் எடுக்கும் அறிவார்ந்த முடிவுகளும், அமைதியான காட்சிகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசும் வசனங்களும்
கைதட்ட வைக்கின்றன.
தங்கையாக லஷ்மி மேனனுக்கு தான் அதிக அழுத்தமான கதாப்பாத்திரம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
குணச்சித்திரக் கதாப்பாத்திரத்திலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார் தம்பிஇராமையா..
வில்லன் ராகுலின் நடிப்பு அஜித்துக்கு நிகராக அற்புதம்.. குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் ஆழமான சிந்தனைகள்..
காமெடிக்கு சூரியும், ஆதித்யா சேனல் தொகுப்பாளினியும், சுவாமிநாதனும், ஸ்ருதிஹாசனும் இருக்கிறார்கள்.. ஏன் இங்கே ஸ்ருதிஹாசனைக் குறிப்பிடுகிறேன் என்று படம் பார்த்தால் புரியும்.
படத்தில் பல இடங்களில் லாஜிக்கை மறந்துவிட வேண்டும். அஜித் ரசிகர்களையும், கமர்ஷியல் சினிமா ரசிகர்களையும் மகிழ்விக்கும் பக்கா தலையிசம் நிறைந்த திரைப்படம்.
முதல் பாதியில் அமைதியாக, சாந்தமாகதான் உண்டு, தன் வேலையுண்டு என்று கதாநாயகன் இருக்கிறார் என்றால் பின்பாதியில் ப்ளாஷ்பேக்கில் தெறிக்க விடப்போகிறார் என்பது பாட்ஷா காலத்து பாணி.. இந்தப் படத்தில் அந்தப் பாணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல இடங்களில் தொய்வடையும் திரைக்கதையை அஜித்தின் ஆக்ரோஷமான நடிப்பும், சட்டென மாறும் முகபாவனைகளும் இறுதி வரை தூக்கி நிறுத்துகிறது.
வெற்றியின் ஒளிப்பதிவும், அனிருத்தின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளன.
மொத்தத்தில் அஜித் ரசிகர்களை தலையில் தூக்கிக் கொண்டாட வைக்கும், தீபாவளியின் குதூகலமான மனதுடன் திரையரங்கு செல்லும் கமர்ஷியல் சினிமா ரசிகர்களை படம் முடியும் வரை இருக்கையில் அமர வைத்து மகிழ்ச்சிபடுத்தும் இந்த வேதாளம்..
– ஃபீனிக்ஸ்தாசன்