14-ஆவது நாடாளுமன்றத் தொடரில் 4-ஆவது அவைன்போது நாடாளுமன்ற வளாகத்தில் அரசாங்கமும் எதிர் கட்சிகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின் வழி அரசாங்கமும் எதிர்கட்சிகளும் ஒருமுகமாக நாட்டின் பொருளாதார மீட்புப் பணிகளையும் கோவிட் 19 தொற்றின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்புத் தர இணக்கம் கண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையென்று கூறலாம்.
ஆனால், இந்தப் புதிய திருப்பத்தினால் இந்திய சமூகம் பயனடைவார்களா?


இப்போது நாடு 12-ஆவது மலேசிய ஐந்தாண்டுத் திட்டத்தை (RANCANGAN MALAYSIA KE 12 ) உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இத்திட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த மலேசியத் திட்டம்தான் வரும் 5 ஆண்டுகளுக்கான நமது நாட்டு மக்களின் மேம்பாட்டுத் திட்டத்தை உள்ளடக்கியிருக்கும் ஒரு செயல்திட்ட ஆவணமாகும். இந்த ஆவணத்தில் இந்தியர்களுக்கான மேம்பாடு பற்றிக் குறிப்பிட்டிருந்தால்தான் அந்த மேம்பாட்டுக்கான நிதி வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும்.
அப்போதுதான் அத்திட்டம் தங்குதடையின்றி செயலாக்கம் பெற அரசு அதிகாரிகளும் முயற்சி செய்வர்.
எடுத்துக்காட்டாக, 1973 ஆம் ஆண்டு வாக்கில் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் தலைமையில் 2 ஆவது மலேசியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தில் தோட்டத் தொழிலாளர் சொந்த வீட்டுடமைத் திட்டம் வரைறுக்கப்பட்டிருந்தது.


இத்திட்டத்தைத் தயாரிப்பதற்குப் பிரதமர் இலாகாவில், பொருளாதாரப் பிரிவில் முதன்மை அதிகாரியாகப் பணியாற்றிய டத்தோ கு. பத்மநாபன் பெரும்பங்காற்றினார். இத்திட்டம் நாட்டிலுள்ள 21 தோட்டங்களில் செயல் வடிவம் பெற்றதென அறிக்கைகள் கூறுகின்றன. அதற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 5-ஆண்டு மலேசியத் திட்டங்களில் இந்தியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தெளிவாக வரையப்படவில்லை எனலாம்.
இருப்பினும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10-ஆவது மலேசிய 5 ஆண்டுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான சொந்த வீட்டுடமைத் திட்டம் (SKIM KHAS PEMBIAYAAN RUMAH PEKERJA ESTET – SKRE) மீண்டும் இடம்பெற்றது. இத்திட்டத்திற்கு 50 மில்லியன் சுழல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இத்திட்டமும் முறையாகச் செயல்படுத்தப்படாமலேயே போய் விட்டது எனலாம்.
இத்திட்டத்தினை பொறுப்புடன் நிறைவேற்ற 27.10.2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த வரவு செலவு விவாதத்தில் அப்போதைய பிரதமர் நஜிப் துன் அப்துல் ரசாக் சமர்ப்பித்தார்.
இருப்பினும், இத்திட்டத்திற்கு உயிரூட்டும் வகையிலே அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் பல திட்டங்களை செயல்படுத்தினார். அதிலே இந்தியர்களின் நிதி பங்குடமையை உயர்த்துவதற்கு 1.5 பில்லியன் மதிப்புடைய தேசிய முதலீட்டுக் கழகம் – PNB-யின் (PERMODALAN NASIONAL BERHAD) பங்குகளை AMANAH SAHAM SATU MALAYSIA என்ற பெயரில் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.
ஆகவே, புளுபிரிண்ட் என்பது வெட்டிப் பேச்சல்ல. இது உண்மையான இந்நாட்டு இந்தியர்களின் மேம்பாட்டுக்கான செயல் திட்டமாகும். ஆகவே, 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான மேம்பாட்டுத்திட்டம் அவசியம் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் போதிய நிதியும் ஒதுக்கப்பட்டு மேம்பாட்டுத் திட்டமும் செயல் வடிவம் பெறும்.
-டத்தோ மு.பெரியசாமி
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal