
கோலாலம்பூர் : கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலமான மஇகாவின் 8-வது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெற்றன.
இந்து பாரம்பரிய முறைப்படி, செந்துல் இந்து மயானத்தில் அமரர் பழனிவேலுவின் நல்லுடல் மஇகா கொடி போர்த்தப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.

புதன்கிழமையன்று (ஜூன் 18) தலைநகர் பங்சாரில் உள்ள அவரின் இல்லத்தில் பழனிவேலுவின் நல்லுடல் கிடத்தப்பட்டு, பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோருடன் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் பழனிவேலுவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி, பகாங் மாநில மந்திரி பெசார் வான் ரோஸ்டி, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோரும் பழனிவேலுவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், பழனிவேலு மறைவுக்கு தன் முகநூல் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டார்.

தேசிய முன்னணி, மஇகா தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியான ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக், துணையமைச்சர் எம்.குலசேகரன் ஆகியோரும் கட்சி பேதமின்றி பழனிவேலுவின் இல்லத்திற்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.





பழனிவேலுவுக்கு தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்திய படக் காட்சிகளை இங்கே காணலாம்.