கெய்ரோ, ஆக. 20– எகிப்தில் கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 61 பேர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டனர். நிலைமை மோசமானதை தொடர்ந்து அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் (படம்) பதவி விலகினார்.
பொது மக்களின் வரிப் பணத்தை தங்களது சொந்த பங்களாக்கள் மற்றும் அரண்மனையில் ஆடம்பர வசதிகளை பெருக்கி கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் முபாரக் மீதான புகார் குறித்து நிரூபணம் ஆகவில்லை. வழக்கு விசாரணை தொடங்கி 2 ஆண்டு ஆகியும் அவர் மீதான இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து முபாரக் மீது கூறப்பட்ட ஊழல் புகார் வழக்கில் இருந்து நேற்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எனவே, அவர் இந்த வாரத்தில் விடுதலை ஆகிறார். அதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்.
இந்த தகவலை முபாரக்கின் வக்கீலும், நீதிமன்ற வட்டாரங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, அவரது மகன்கள் அலா, கமால் ஆகியோரை தொடர்ந்து காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.