புதுடெல்லி, டிசம்பர் 19 – செவ்வாய்க் கிரகத்திற்கு விண் கலத்தை வெற்றிகரமாக ஏவியதைத் தொடர்ந்து, வான்வெளி ஆராய்ச்சிகளில் உலகின் முதன்மை நாடுகளில் ஒன்றாக உருவெடுத்து வரும் இந்தியா, நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பளுவான ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ (Indian Space Research Organisation) என்பது இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமாகும்.
நேற்று இஸ்ரோ , ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனது ஆராய்ச்சி மையத்திலிருந்து, இந்த புதிய ஏவுகணை குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவி விடப்பட்ட இந்த ஏவுகணை 126 கிலோ மீட்டர் உயரத்துக்குப் பறந்து பின்னர் வங்காள விரிகுடா கடல் பகுதியில் வான்குடை (பாராசூட்) மூலம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.