கோத்தகினபாலு, ஜூன் 9 – முன்பே உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பயணம் என்பதால் சவுதி அரேபியாவுக்கான தனது பயணத் திட்டத்தைக் கைவிட முடியவில்லை எனப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே சபாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்குத் தம்மால் உடனடியாகச் செல்ல இயலவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் கினபாலு மலைச்சிகரத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
இச்சமயம் அவர் மலையேற்ற வழிகாட்டிகளையும், தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினரையும் சந்தித்துப் பேசினார். சவுதி அரேபியா சென்றிருந்த போதிலும், நிலநடுக்கத்திற்குப் பிறகான நிலவரங்கள் குறித்துத் தாம் தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
“திங்கட்கிழமை இரவு 11 மணிக்குக் கோலாலம்பூர் வந்த பின்னர், உடனடியாகச் செவ்வாய்க்கிழமை காலையே, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டறிய கோத்தகினபாலுவுக்குப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வர உள்ளது என்றாலும், நேரில் வருவது முக்கியம் எனக் கருதினேன்.
“நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நேரங்களில் மட்டுமல்லாது கெட்ட நேரங்களிலும் மத்திய அரசாங்கம் மக்களுக்குத் துணை நிற்கும்,” என்றார் நஜிப்.
இதையடுத்து சபாவில் இடிபாடுகளை அகற்றவும், கினபாலு பூங்காவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கவும் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
“கினபாலு மலைச்சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் அது சபாவுக்கும், மலேசியாவுக்கும் பெரும் இழப்பாக அமைந்துவிடும். கினபாலு மலைச்சிகரம் எப்போதும் போல் உள்ளூர் மற்றும் அனைத்துலகப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பிரபலத் தலமாக நீடிப்பதைக் காண விரும்புகிறேன்,” என்று நஜிப் மேலும் தெரிவித்தார்.