Home நாடு “1எம்டிபி விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை” – ரோஸ்மா தரப்பு அறிக்கை!

“1எம்டிபி விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை” – ரோஸ்மா தரப்பு அறிக்கை!

499
0
SHARE
Ad

NAJIBகோலாலம்பூர், ஜூலை 11 – “1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு, அவரை சிக்க வைப்பதற்காகவும், அவமானப்படுத்துவதற்காகவும் பரப்பப்பட்ட போலியான குற்றச்சாட்டுகள்” என ரோஸ்மா சார்பில் அவரது வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் நூர்ஹஜ்ரான் முகமட் நூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது கட்சிக்காரர் (ரோஸ்மா மான்சோர்) எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. 1எம்டிபி விவகாரத்தில், அவருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு, அவரை சிக்க வைப்பதற்காகவும், அவமானப்படுத்துவதற்காகவும் பரப்பப்பட்ட போலியான குற்றச்சாட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

சரவாக் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அஃபின் வங்கிக் கணக்கு, ரோஸ்மா மான்சோரின் வங்கிக் கணக்கு தான் என்பதை உறுதி செய்துள்ள அவரின் வழக்கறிஞர், அந்த கணக்கு ரோஸ்மா தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் போது உருவாக்கப்பட்டது எனவும், பொது வெளியில் அவரது தனிப்பட்ட கணக்கு விவரங்களை வெளியிட்டது நிதி சேவைகள் சட்டம் 2013 (Financial Services Act 2013) படி குற்றச்செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், இத்தகைய தகவல்களை வெளியிட்டவர்கள் மீது பேங்க் நேகாரா விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையே, ரோஸ்மாவின் வங்கிக் கணக்குகளை விசாரிக்க தனிக்குழு அமைக்க இருப்பதாக 1எம்டிபி விவகாரத்தில் பல்முனை முகைமைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கைக் குழு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த வியாழக்கிழமை, 1எம்டிபி விவகாரத்தில் ரோஸ்மா மான்சோருக்கும் தொடர்பு இருப்பதாக சரவாக் ரிப்போர்ட் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.