கோலாலம்பூர், ஜூலை 27 – எட்ஜ் குழும பத்திரிகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் சகோதரர் நசிர் ரசாக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது நட்பு ஊடகத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாம் எப்போதுமே ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
தொழில் சமூகத்தின் தூணாக எட்ஜ் குழுமம் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். தனது சகோதரரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப்புடனான விவகாரங்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
“எனினும் குடும்ப விவகாரங்களைப் பொறுத்தவரையில் எல்லாம் நல்லவிதமாகவே உள்ளது. எனது சகோதரருடன் நான் பேசுவேன். ஆனால் அது தொடர்பான விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது,” என்றார் நசிர் ரசாக்.
இதையடுத்து அவரைச் சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நாடு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு.., “நீங்கள் (செய்தியாளர்கள்) என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறீர்கள். ஆனால் இப்போதைக்கு எனது காரை நோக்கிச் செல்வதே சரியான வழி, நன்றி,” என்று கூறியபடியே தனது காரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார் நசிர் ரசாக்.