Home Featured நாடு மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தல்: வேட்பு மனுக்கள் விநியோகம்!

மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தல்: வேட்பு மனுக்கள் விநியோகம்!

573
0
SHARE
Ad

MIC Logo and Flagகோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என மஇகா தலைமையகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று வியாழக்கிழமை முதல் மஇகா தலைமையகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என மஇகா தேசியத் தலைவருக்கான மறு-தேர்தல் குழுத் தலைவர் டத்தோ பி.சகாதேவன் (படம்)  நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்

கடந்த 24 ஜூலை 2015ஆம் நாள் நடைபெற்ற மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தலை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட தேர்தல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

Datuk Sahadevanஅந்தக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு;-

  • டத்தோ பி.சகாதேவன் (தலைவர்)
  • டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் கே.எஸ்.நிஜார்
  • டத்தின் படுக்கா ஜெயா பார்த்திபன்
  • எம்.ஆதிமூலன்
  • டி.நாகராஜன்
  • சக்திவேல் அழகப்பன் (செயலாளர்)

மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21 ஆகஸ்ட் 2015ஆம் நாள் மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை, செயலவைக் கூட்ட அறை, முதல் மாடி, மெனாரா மாணிக்கவாசகம், எண்: 1, ஜாலான் ரஹ்மாட், 50350  கோலாலம்பூர் என்ற முகவரியில் நடைபெறும்.

தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர், மஇகா தலைமையகத்தால் இலவசமாக வெளியிடப்படும், குறிப்பிடத்தக்க வேட்புமனுப் பாரத்தின் மூலம், முன்மொழியப்பட வேண்டும்.

மஇகா கிளைத் தலைவர்கள், 2009 இடைக்கால மத்திய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் மஇகா தலைமையகத்திலிருந்து இந்த வேட்புமனுப் பாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சகாதேவன் அறிவித்துள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுப் பாரங்களை நாளை வியாழக்கிழமை 13 ஆகஸ்ட் 2015 ஆம் நாள், பிற்பகல் 2.00 மணி முதல் மெனாரா டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், எண்: 1, ஜாலான் ரஹ்மாட், கோலாலம்பூர், என்ற முகவரியிலுள்ள மஇகா தலைமையகக் கட்டித்தின் 6வது மாடியில் உள்ள மஇகா தலைமையக அலுவலகத்திலிருந்து கிளைத் தலைவர்களும், 2009 மத்திய செயலவை உறுப்பினர்களும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வேட்புமனுப் பாரமும் ஒருவரால் முன்மொழியப்பட்டு, ஐந்து பேர்களால் வழிமொழியப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் மஇகா கிளைக் காங்கிரஸ் தலைவர்களாகவோ, 2009 மத்திய செயலவை உறுப்பினர்களாகவோ இருக்க வேண்டும்.

ஒரு வேட்பாளர், முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட, 50 வேட்புமனுப் பாரங்களைத் தாக்கல் செய்தால் மட்டுமே அவரது வேட்புமனு செல்லத்தக்கதாக அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக் கொள்ளப்படும்.

போட்டி இருப்பின் தேசியத் தலைவருக்கான தேர்தல் 6 செப்டம்பர் 2015ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெறும்.

2009 மத்திய செயலவையின் அங்கீகாரத்துடன், மஇகா தலைமையகத்தால் நடத்தப்பட்ட மஇகா கிளைகளுக்கான மறு-தேர்தலை நடத்தி முடித்த கிளைகளின் தலைவர்கள் மற்றும் மஇகா 2009 மத்திய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைக் கொண்டவர்கள் ஆவர் என்றும் சகாதேவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.