Home Featured உலகம் “எங்கள் முதுகில் குத்திவிட்டார்கள்” ரஷ்ய அதிபர் புடின் ஆவேசம்

“எங்கள் முதுகில் குத்திவிட்டார்கள்” ரஷ்ய அதிபர் புடின் ஆவேசம்

722
0
SHARE
Ad

Putin_4--அங்காரா- ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம், தங்கள் முதுகில் குத்திவிட்டதாக துருக்கி மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டி உள்ளார்.

துருக்கி அரசின் இந்தச் செயல்பாடானது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிரியாவில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய போர் விமானம், தங்களது வான் எல்லைக்குள் நுழைய முற்பட்டதாகக் கூறி, அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது துருக்கி. இது ரஷ்ய அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

எச்சரிக்கைகளை விடுத்த பின்னரும், அவற்றை பொருட்படுத்தாமல் தங்களது வான் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானம் நுழைய முயன்றதாகவும், அதன் காரணமாகவே போர் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதனைச் சுட்டு வீழ்த்தியதாகவும் துருக்கி அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “எங்களை முதுகில் குத்திவிட்டார்கள்” என ஆவேசத்துடன் கூறினார்.

“இதை வேறு மாதிரி சொல்லமுடியாது. இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி, ரஷ்யா இடையேயான உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தச் சம்பவம் பற்றி கவனத்துடன் ஆராயப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக் கொள்ளவே முடியாது” என்று புடின் கூறியுள்ளார்.

ரஷ்ய போர் விமானம் சிரியாவின் எல்லைக்குள்தான் சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ரஷ்ய விமானிகள் துருக்கிக்கு எதிராக எந்தவொரு செயலிலும் ஈடுப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.