வரலாறு காணாத மழை, தேசிய பேரிடர், இயற்கைச் சீற்றம் என பல்வேறு பெயர்களில், காரணங்களைக் கூறி, நடந்த தவறுகளை மூடி மறைக்கப் பார்த்தாலும், இயற்கையிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது என்பதற்கு சென்னை தான் முக்கிய சாட்சி.
ஆட்சிக்கு ஒரு தேர்தல் வாக்குறுதி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு இலவச அறிவிப்பு என திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த தமிழகம், இன்று சந்தித்துள்ள நிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்ல வாக்காளர்களும் முக்கியக் காரணம் தான்.
சென்னை வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் போதும் ஆட்சி செய்தவர்களை குறை சொல்லிப் பயனில்லை, அடுத்து நடக்க வேண்டியவற்றை எதிர்நோக்குவோம் என்று நாமும் கூறிக் கொண்டு ஒதுங்கி விட முடியாது. நோயுற்ற போது மருந்தை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்துவதும் மரபு தான். அத்தகைய ஊசி தான் இந்தக் கட்டுரையும்.
இதற்கான காரணம் குறித்து தற்போது அதிகம் பேசப்படுவது என்னவென்றால், பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது அனைத்துமே ஒரு காலத்தில் நீர்நிலைகள் என்பது தான். கடந்த சில வருடங்களாகவே கட்டப்படும் அத்தகைய குடியிருப்புப் பகுதிகள், அரசு அனுமதியின்றி கட்டி இருக்க முடியாது என்று தனியாகக் கூறத் தேவையில்லை..
நகரமயமாதல், வேலை தேடி நாளுக்கு நாள் சென்னை வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அத்தகைய குடியிருப்புப் பகுதிகளை தவிர்க்க முடியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது.
புதிதாக வேலை தேடுவோராக இருந்தாலும் சரி, படித்து பட்டம் பெற்ற இளைஞர்களாக இருந்தாலும் சரி சென்னை மட்டுமே தஞ்சம் அளிக்கும் இடம் என்ற மனோபாவத்தை வளரவிட்டது யார் தவறு? மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி என பன்முக நகரங்கள் இருந்தும், சென்னைக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு மட்டுமே பிழைக்க முடியும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது யார்?
சென்னையில் நேற்று மட்டும் 80 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேறி உள்ளதாக செய்திகள்
முன்னோர்களின் மதிநுட்பத்தால், தமிழகத்தில் அணைகள், நதிகள், கண்மாய் போன்ற நீர்நிலைகள் எல்லாம் சங்கிலித் தொடர் அமைப்பால் பிணைக்கப்பட்டவை. ஆனால், அந்த அமைப்பே தற்போது சீர்குலைந்து வருகிறது.
இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது என்றாலும், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என எச்சரிக்கை இருந்தும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தவில்லை என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு மட்டுமல்ல பொதுப் பார்வையாளர்களின் குற்றச்சாட்டும் தான். இதற்கு அரசு கூறும் பதில் தான் என்ன?
அவசியான சாலை கட்டமைப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளாமல், இலவச தொலைக்காட்சிக்காகவும், அரவை இயந்திரத்திற்காகவும் வாக்குகளை இழந்துவிடும் வரை, இயற்கையின் விளையாட்டு தொடரத்தான் செய்யும். ‘உதவி செய்யுங்கள்’ என்ற கூக்குரல்கள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கத்தான் செய்யும்.
– சுரேஷ்