Home Featured இந்தியா எம்எஸ்.சுப்புலட்சுமியிடம் காந்தி விரும்பி பாடச் சொன்ன பாடல் – நினைவு கூறும் பேத்தி!

எம்எஸ்.சுப்புலட்சுமியிடம் காந்தி விரும்பி பாடச் சொன்ன பாடல் – நினைவு கூறும் பேத்தி!

2208
0
SHARE
Ad

MS_Subbulakshmi_04சென்னை – கர்நாடக இசையின் பேரரசி என்று அழைக்கப்படும் எம்எஸ். சுப்புலட்சுமியிடம், மகாத்மா காந்தியடிகள் விரும்பிக் கேட்டு, பாடச் சொன்ன பாடல் ஒன்று, பின்னாளில் அவர் மறைந்த போது ஒலிக்கப்பட்டது. அந்த பாடல் பற்றிய நினைவு வரும் போதெல்லாம், எம்எஸ்.சுப்புலட்சுமி கண்ணீர் வடித்தது குறித்து, அவரின் பேத்தி ஸ்வாதி தியாகராஜன் தனது வலைப் பக்கத்தில் உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரது அந்தப் பதிவில், “தேவதாசி மரபைச் சேர்ந்த எனது பாட்டி, இளம் பருவத்திலேயே, ஒரு ஆணின் விருப்பம் சார்ந்து அவரது ஆதரவுடன் வாழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் பின்னர், அவர் மெட்ராஸ் வந்ததும், திரைப்படங்களில் பாடியும், நடித்தும் வந்தார். ஒரு பெண்ணாக தன் முழு திறமையையும் அவர் அப்போது வளர்த்துக் கொள்ளத் துவங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தியடிகள், எம்எசிடம் விரும்பிக் கேட்டக் கொண்ட, பாடல் குறித்து கூறுகையில், “1947-ல், அதாவது சுந்தந்திரம் கிடைப்பதற்கு ஒரு சில மாதங்கள் முன்னதாக, எனது தாத்தாவிற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், காந்தியடிகளின் விருப்பமான பஜனைப் பாடல்களில் ‘ஹரி தும் ஹரோ’ என்ற பாடலை எம்எஸ் பாடி, அதனை பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.”

#TamilSchoolmychoice

“அதற்கு தாத்தா, பஜனைப் பாடல்கள் பாடி, நாங்கள் பழகவில்லை. அதனால் வேறு பாடகர்களை பாட வைக்குமாறு கூறியுள்ளார். அதன் பிறகு, உடனே காந்தியிடமிருந்து அவருக்கு நேரடியான அழைப்பு வந்தது. அப்போது காந்தியடிகள், ‘அந்த பாடலை முடிந்தால் எம்எஸ் பாடட்டும். அவர் பாடவில்லை என்றால், வேறு யாரும் பாடமாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.”

“அதன் பிறகு அந்த பாடலை பாட்டி, பாடி ஒலிப்பதிவு செய்து காந்திக்கு அனுப்பி உள்ளார். நாட்கள் கடந்து, புது வருடம் பிறந்து விட்டது. ஒருநாள் ஆல் இந்தியா வானொலியில், காந்தி படுகொலை செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, எனது பாட்டி பாடிய ‘ஹரி தும் ஹரோ’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதனைக் கேட்டு, எனது பாட்டி மயங்கி விழுந்துள்ளார்.”

“அந்த சம்பவம் பற்றி எங்களுக்குக் கூறும் பொழுதெல்லாம், பாட்டி அழுது கொண்டே இருப்பார். காந்தியின் மறைவிற்குப் பிறகு, அவர் தனது வாழ்நாளில், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் மரணத்தின் போது மட்டுமே அந்தப் பாடலைக் கேட்டுள்ளார்” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.