கோத்தாகினபாலு – ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லீம் மதத்தினருக்கென சட்ட திட்டங்களை வகுக்கும் அமைப்பு ஃபாட்வா மன்றம் எனப்படும். சபாவின் ஃபாட்வா மன்றம், சுகாதாரக் காரணங்களின் அடிப்படையில், அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லீம்கள், வேப்பிங் எனப்படும் மின் சிகரெட்டை புகைக்கவும், ஷிஷா எனப்படும் புகை பிடிக்கும் வழக்கத்திற்கும் தடை விதித்துள்ளது.
மின்சிகரெட் புகைப்பதற்கு முஸ்லீம்களிடையே தடை செய்யப்படுவதாக தேசிய ஃபாட்வா மன்றம் செய்துள்ள முடிவைத் தொடர்ந்து, சபாவின் ஃபாட்வா மன்றமும் இந்த முடிவைச் செய்துள்ளதாக, சபா முஃப்டி அறிவித்துள்ளார்.
ஷாரியா நியதிகளின்படி தங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் முஸ்லீம்கள் ஈடுபடக் கூடாது என்பதன் அடிப்படையில் மின் சிகரெட் போன்ற பழக்கங்களில் ஈடுபடுவதற்கு முஸ்லீம்களுக்கு சபாவில் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சபா மாநில அரசாங்கம் இதுவரையில் மின் சிகரெட் குறித்து அதிகாரபூர்வ தடையோ, அறிவிப்போ எதனையும் விடுக்கவில்லை என்பதால், அந்த மாநிலத்தில் மின் சிகரெட் விற்பனைகளும், வணிகங்களும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.