கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பாடல் குறித்து, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தாமரை பேட்டி அளித்து இருக்கிறார். அந்தப் பேட்டியில், தன் தனிப்பட்ட வாழ்க்கை, பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த தருணத்திலும், ‘தள்ளிப் போகாதே’ போன்ற காதல் பாடல்களை எழுத வேண்டி இருப்பதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்தப் பேட்டியில் ‘தள்ளிப் போகாதே’ பாடல் உருவான விதம் குறித்து கூறுகையில், “ரஹ்மான் உருவாக்கிய மெட்டை முதலில் கேட்டவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் குழம்பிப் போனேன். இந்த மெட்டிற்கு மிக வித்தியாசமாக பாடல் எழுதும் படி ரஹ்மான் கேட்டுக் கொண்டதாக கௌதம் என்னிடம் கூறினார். அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது.”
“அதன் பிறகு நான் புரிந்து கொண்டேன், இது வழக்கமான பாடல் அல்ல என்று. சிறு சிறு கவிதைகளாக முதலில் எழுதி இந்த பாடலை உருவாக்கினோம். ரஹ்மானின் இசை எப்போதும் யூகிக்க முடியாதவையாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் தாமரையின் கணவர் தியாகு, ‘தாமரையுடன் வாழ விரும்பவில்லை’ என பகிரங்கமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.