Home Featured நாடு “முட்டை விற்று, வாகன உதவியாளராக இருந்து உயர்ந்தவர் எனது தந்தை” – அகமட் பாஷாவின் மகள்...

“முட்டை விற்று, வாகன உதவியாளராக இருந்து உயர்ந்தவர் எனது தந்தை” – அகமட் பாஷாவின் மகள் பதிலடி!

578
0
SHARE
Ad

Ahmad-Bashahகோலாலம்பூர் – நேற்று கெடா மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகிய டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், அந்த செய்தியாளர் சந்திப்பில் புதிய மந்திரி பெசார் அகமட் பாஷா குறித்து பேசுகையில், பதவி ஏற்பு விழாவில் தூங்கி விடப் போகிறார் என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுப் போனார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று ஊடகங்கள், அகமட் பாஷா பொதுமேடைகளில் தூங்கி விழுகும் பழைய புகைப்படங்களை எடுத்து வெளியிடத் தொடங்கின.

அது எதிர்கட்சி வட்டாரங்களில் மிகவும் கேலிக் கூத்தாகப் பார்க்கப்பட்டது. ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூட தான் வெளியிட்ட கருத்து ஒன்றில், பொது நிகழ்ச்சிகளில் அகமட் பாஷா ஆழ்ந்து தூங்கிவிழுகின்றார் என்று தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்ற கெடா மந்திரி பெசார் பதவி ஏற்பு நிகழ்வில் கூட, அகமட் பாஷா சற்று கண் அயர்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அகமட் பாஷாவின் இளைய மகள் அசிரா ஹவிசா தனது தந்தை குறித்து இணையதளங்களில் விமர்சிப்பவர்களை தனது கட்டுரையின் வாயிலாக விளாசித் தள்ளவிட்டார்.

தனது தந்தை பெரிய அளவில் படிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் அசிரா, என்றாலும் அவரை நினைத்து தாங்கள் மிகவும் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலேயே தனது குடும்ப பாரத்தை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட தனது தந்தை, முட்டை விற்று, டுரியன் பழங்கள் விற்று, லோரியில் உதவியாளராகப் பணியாற்றி வாழ்வில் இவ்வளவு பெரிய உயர்ந்த நிலைக்கு வந்தவர் என்று அசிரா தெரிவித்துள்ளார்.

தான் படிக்காவிட்டாலும், தனது உடன்பிறந்தவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைத்தார் என்றும் அசிரா குறிப்பிட்டுள்ளார்.

தனது 20 வயதில் கட்சியில் சேர்ந்து அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் என் தந்தை என்றும் அசிரா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை ஊடகங்களின் வழியாக விமர்சிப்பவர்கள் முறையாக, அறிவாளித்தனமாக விமர்சிக்க வேண்டும் என்றும் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.