Home Featured இந்தியா இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா காலமானார்!

இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா காலமானார்!

606
0
SHARE
Ad

sangmaபுதுடெல்லி – இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா (வயது 68) இன்று மாரடைப்பால் காலமானார்.  மேகலாயா மாநிலத்தின் மேற்கு காரோ குன்றுகள் மாவட்டத்தில் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி பிறந்தவர் சங்மா.

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்த சங்மா 1988-1990 ஆம் ஆண்டு மேகாலயா மாநில முதல்வராக பதவி வகித்தவர். 1977-ஆம் ஆண்டு முதல் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1996-1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகராகவும் சங்மா பணியாற்றினார். 1999-ஆம் ஆண்டு சோனியா வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற பிரச்சினையில் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. அப்போது சரத்பவாருடன் வெளியேறி தேசியவாத காங்கிரஸை உருவாக்கியவர்களில் சங்மாவும் ஒருவர்.

#TamilSchoolmychoice

பின்னர் 2004 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸில் இருந்து வெளியேறி மாநில கட்சியை உருவாக்கினார். பின் அக்கட்சியை திரிணாமுல் காங்கிரஸுடன் இணைத்தார் சங்மா.

திரிணாமுல் காங்கிரஸில் இருந்தும் விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரவுடன் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் சங்மா.

பின்னர் தேசிய மக்கள் கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வந்தார். தற்போது தூரா லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த சங்மா, இன்று மாரடைப்பால் காலமானார். சங்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் வரும் 8-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.