Home Featured நாடு பத்துகாஜாவில் உணவில் விஷம்: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பத்துகாஜாவில் உணவில் விஷம்: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

521
0
SHARE
Ad

racunn.transformedபத்து காஜா – பத்து காஜாவில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் சாப்பாட்டில் கலந்த விஷ வாயு தான் என்ற ஒரு வதந்தி வாட்சாப்பில் பரவி வருவதை அறிந்து பொதுமக்கள் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் என மாநில செயற்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்துள்ளார்.

பாதிப்பிற்குள்ளான பகுதிகள் என நம்பப்படும் இடங்களில் நேற்று தீயணைப்புத்துறை தேவையான உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்ததில், விஷ வாயு ஏதும் பரவவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பொதுமக்கள் யாரும் தவறான தகவல்களால் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்றும் இன்று பத்து காஜா மருத்துவமனைக்கு வந்த மா ஹாங் சூன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் கூறுகையில், “நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகின்றது”

“அவர்கள் சாப்பிட்ட உணவு விஷமானதால் (food poisoning) பாதிப்படைந்துள்ளனர். சிபுத்தேவில் உள்ள ஒரு உணவுக்கடையில் அவர்கள் அனைவரும் உணவு வாங்கியுள்ளனர். அந்த உணவில் ஆர்கனோபாஸ்பேட் (Organophosphat) என்ற ஒருவகையான பூச்சிக்கொல்லி கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது” என்று இன்று மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பின்னர் மா ஹாங் சூன் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் கவலைக்கிடமான நிலையில் இருந்தவர்கள் மட்டும் ராஜா பெர்மாய்சூரி பாய்னுன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மா ஹாங் சூன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட உணவுக்கடையை சுகாதாரத்துறை உடனடியாக முடக்கியுள்ளதோடு, அக்கடையில் அருகில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்து வருகின்றது.

எந்தெந்த தொழிற்சாலைகளில் ஆர்கனோபாஸ்பேட் (Organophosphat) என்ற இந்த பூச்சிக்கொல்லி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகின்றது.