Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா சொத்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் மீண்டும் விசாரணை!

ஜெயலலிதா சொத்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் மீண்டும் விசாரணை!

399
0
SHARE
Ad

jayalalithaபுதுடெல்லி – வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை முதல் மீண்டும் நடைபெற உள்ளது. கர்நாடகா அரசு தரப்பு தமது இறுதிவாதத்தை மேலும் 4 நாட்கள் முன்வைக்க உள்ளது.

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனிநீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். இதனை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

#TamilSchoolmychoice

இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது.

அப்போது, கர்நாடகா அரசு தமது இறுதி வாதத்தை வைத்தது. கர்நாடகா அரசு தரப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது வாதங்களை முன்வைத்தார்.

அவர் தமது வாதத்தில், முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊதியமாக ஒரு ரூபாய் பெற்றார்; ஆனால் அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ55 கோடி சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்;

அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் இந்த நூற்றாண்டின் மிகப் பிரம்மாண்ட திருமணம்; கட்சி தொண்டர்களிடம் இருந்து தாம் நிதி பெற்றதாக ஜெயலலிதா கூறுவது பொய்; கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிட்டதில் வெளிப்படையாகவே கணித பிழைகள் இருக்கிறது என சுட்டிக்காட்டினார்.

பின்னர் வழக்கின் தீர்ப்புகள் உள்ளிட்ட ஆவணங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 10-ந் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு உடனடியாக வழக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்தது. கர்நாடகா அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளது.

கடந்த முறை விசாரணையின் போது இறுதிவாதத்தை முன்வைக்க 3 நாட்கள் தேவை என கர்நாடகா அரசு கோரியிருந்தது. தற்போது கர்நாடகா அரசு தரப்பு மேலும் 4 அல்லது 5 நாட்கள் அவகாசம் கோர இருக்கிறது.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் எந்த ஒரு காரணத்துக்காகவும் ஒத்திவைக்கப்படாமல் இருந்தால் இந்த வழக்கு விசாரணை மொத்தம் 12 நாட்கள் நடைபெற்று தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கிறது.