Home Featured தமிழ் நாடு இன்று சென்னை செல்கிறார் அமித்ஷா! விஜயகாந்தை சந்திப்பாரா?

இன்று சென்னை செல்கிறார் அமித்ஷா! விஜயகாந்தை சந்திப்பாரா?

532
0
SHARE
Ad

vijayakanth-amit-shah-600சென்னை – பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, இன்று சென்னை செல்லும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில், தே.மு.தி.க., விஷயத்தில், பா.ஜ., தலைவர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ஜாவடேகர், மாநில தலைவர் தமிழிசையுடன் சென்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து, கூட்டணி பேச்சு நடத்தினார். அடுத்த சில நிமிடங்களில், ‘அது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என, தே.மு.தி.க., அறிக்கை வெளியிட்டது. இதனால், பா.ஜ., அதிர்ச்சி அடைந்தது.

இதனால் கடுப்பான, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலர் எச்.ராஜா போன்றோர், ‘தனித்துப் போட்டியிடுவதே உகந்தது’ என, வலியுறுத்தினர். மேலிடமோ,

#TamilSchoolmychoice

‘தமிழகத்தில் கட்சி வளர வேண்டும் எனில், ஓட்டுக்களை அதிகம் பெற வேண்டும்; அதற்கு, தே.மு.தி.க., வேண்டும்’ என, கருதியது. அதனால், தே.மு.தி.க.,வை மீண்டும் அணுக முயற்சித்தது. விஜயகாந்தோ, தனித்துப் போட்டி என அறிவித்தார்.

இதற்கிடையே, பா.ஜ.,வில் ஒரு தரப்பு, ‘தே.மு.தி.க.,வுடன் பேசி வருகிறோம்’ என்கிறது. மற்றொரு தரப்போ, ‘சிறிய கட்சிகளுடன் சேர்ந்து, தனித்து போட்டி’ என, கூறுகிறது. இந்த குழப்பமான சூழலில், அமித் ஷா இன்று சென்னை செல்கிறார். அவர், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால், தமிழிசை உள்ளிட்ட கட்சி யின் முக்கிய தலைவர்கள் சிலருக்கு, அதில் விருப்பம் இல்லை. இன்னொரு தரப்பினரோ, ‘கட்சியின் எதிர்கால வளர்ச்சியை பார்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த, 19.3 சத ஓட்டுக்களை தக்கவைக்க, தே.மு.தி.க.,விடம் பேசுவதே உகந்தது’ என்கிறது.

இதற்கிடையே, ‘தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகும்’ என, ஜாவடேகர் நேற்று கூறியதன் பின்னணியில், அமித் ஷாவின் சென்னை வருகை, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கட்சி தலைவர்களிடையே குழப்பம் இருந்தாலும், சோர்ந்து கிடக்கும் தமிழக பா.ஜ.,வினருக்கு, அமித் ஷா வருகை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.