இதுவரை நஜிப் மீதான ஊழல் குற்றச்சாட்டில் கூறப்பட்டு வந்த மொத்த நிதியான 2.6 பில்லியன் ரிங்கிட், அவருக்கு வந்த நிதிகளில் ஒரு பகுதி தான் என்ற அதிர்ச்சி தகவலையும் ஏபிசி வெளியிட்டுள்ளது.
அதன் படி பார்த்தால், நஜிப்பின் வங்கிக் கணக்கிற்கு வந்த மொத்த நிதியின் மதிப்பு தற்போது 1.051 பில்லியன் அமெரிக்க டாலர் (இன்றைய மலேசிய ரிங்கிட் மதிப்பில் 4.202 பில்லியன் ரிங்கிட்) என்று கூறப்படுகின்றது.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஜூலை மாதம், ‘த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, ‘சரவாக் ரிப்போர்ட்’ ஆகிய இரண்டு பத்திரிகைகளும் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 681 மில்லியன் அமெரிக்க டாலர் (அப்போதைய மலேசிய ரிங்கிட் மதிப்பின் படி 2.6 பில்லியன் ரிங்கிட்) எனக் கணக்கிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது ஏபிசி நிறுவனத்தின் படி, இந்த 681 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி, நஜிப்புக்கு வந்த நிதிகளில் ஒரு பகுதி தான் என்பது தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவின் நிதியமைச்சு, இளவரசர் பைசல் பின் துருக்கி பின் பண்டார் அல்சவுத் மற்றும் பிளாக்ஸ்டோன் ஏசியா ரியல் எஸ்டேட் பார்ட்னர் லிமிடட் (Blackstone Asia Real Estate Partner Ltd) எனப் பலரிமிருந்து நஜிப்பின் அராப் வங்கிக் கணக்கிற்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வந்துள்ளன என்று ஏபிசி நிறுவனத்தின் தகவல்களின் அடிப்படையில் மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.