Home Featured நாடு “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்” – மஇகா-விற்கு பெர்காசா எச்சரிக்கை!

“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்” – மஇகா-விற்கு பெர்காசா எச்சரிக்கை!

1120
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – இஸ்லாம் விவகாரங்களில் தலையிடுவதை மஇகா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெர்காசா இளைஞர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலாக்காவில் ‘இஸ்லாமும் – இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் ஆற்றவிருக்கும் உரை தடுத்து நிறுத்தப்பட்டதன் தொடர்பில், இந்த அறிக்கையை பெர்காசா இளைஞர் பிரிவு வெளியிட்டுள்ளது.

“எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அப்பிரிவின் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

வேண்டுமென்றால்,  ‘இஸ்லாமும் – இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ கருத்தரங்கில் மஇகா தலைவர்கள் கலந்து கொண்டு, ஜாகிரிடம் கேள்வி கேட்கட்டும், மாறாக அவரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“மலேசியக் கூட்டமைப்பின் சமயம் இஸ்லாம் தான் என்பதை அவர்கள் (மஇகா) நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே கோபத்தை தூண்டவும், இஸ்லாமை நோக்கி மோசமான உணர்வுகளை வெளிப்படுத்தியும் விளையாடுகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜாகிர் மிகவும் மரியாதைக்குரிய பண்டிதர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள இர்வான், சொற்பொழிவு ஆற்றுவதிலும், கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலும் திறனுடையவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் கேட்கிறேன், ஜாகிர் பேசுவதை ஏன் அவர்கள் தடுக்க வேண்டும்? அதன் தலைப்பிற்காகவா?”

“ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் என்று அவர்களை வலியுறுத்துகின்றேன். ஜாகிர் பேச்சுக்களில் பெரும்பான்மையானவை அறிவார்ந்த விசயமாக தான் இருக்கும். ஒரு விவகாரத்தை ஆழமாக ஆய்வு செய்து, நம்பிக்கையோடு தான் பேசுவார். தெளிவான, துல்லியமான பதில்களைத் தான் அவர் வெளியிடுவார்” என்றும் இர்வான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் இஸ்லாமியத் தலைவரான பேரரசரையும் (Yang di-Pertuan Agong) அவமதிக்கும் வகையில் மஇகா-வின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் இர்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜாகிரின் சொற்பொழிவிற்கு மஇகா உட்பட மலேசியாவின் பல்வேறு இந்து அமைப்புகளிடமிருந்து கண்டனங்கள் எழுந்ததையடுத்து, தேசிய காவல்படைத் தலைவர் காலிட் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், அந்நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.