Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: நான் விரும்பியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை – கருணாநிதி வருத்தம்!

தமிழகத் தேர்தல்: நான் விரும்பியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை – கருணாநிதி வருத்தம்!

524
0
SHARE
Ad

karunanidhi-1(C)சென்னை – வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய் விட்டது. அதனால், அவர்கள் எல்லாம் வருந்துவார்களே என்ற வேதனைதான் எனக்கு மிகுதியாக உள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”பதினைந்தாவது பொதுத்தேர்தல் வரும் மே திங்கள் 16-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சார்பில் 41 இடங்களிலும்,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் 5 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் 5 இடங்களிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில் 4 இடங்களிலும், மக்கள் தே.மு.தி.க. சார்பில் 3 இடங்களிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படைக் கட்சி ஆகியவை தலா ஓரிடத்திலும் என்று 61 தொகுதிகள் தோழமைக் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

திராவிட முன்னேற்றக் கழகம் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள 173 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வாய்ப்புக் கிடைக்காத வேட்பாளர்கள் நிலையில் அவர்கள் எல்லாம் வருந்துவார்களே, அவர்களை எல்லாம் எப்படி நேரில் சந்திப்பது என்ற வேதனைதான் என் மனதைக் குடைகிறது.

எனக்கே மிக நன்றாகத் தெரிந்தவர்கள், கழகத்திற்காக நீண்ட காலம் அரும்பாடுபட்டவர்கள், கழகம் நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டுவர்கள். பலருக்கும், அவர்களுடைய அருமை வாரிசுகளுக்கும் நான் வாய்ப்பளிக்க வேண்டுமென்று விரும்பிய நேரத்திலே, அவர்களை விட வேறு சிலருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.

இந்தத் தேர்தலில் விருப்பமானவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதைவிட, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதுதான் சிறப்பானது என்ற சரியான கருத்து சொல்லப்பட்ட காரணத்தால், நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய் விட்டது. அதனால் அவர்கள் எல்லாம் வருந்துவார்களே என்ற வேதனைதான் எனக்கு மிகுதியாக உள்ளது  என கருணாநிதி கூறியுள்ளார்.