Home Featured தொழில் நுட்பம் இந்தியாவில் பெண்களுக்கு உதவ, இனி செல்பேசிகளில் அவசர அழைப்புக்கான ‘பட்டன்’!

இந்தியாவில் பெண்களுக்கு உதவ, இனி செல்பேசிகளில் அவசர அழைப்புக்கான ‘பட்டன்’!

658
0
SHARE
Ad

புதுடில்லி – அதிகரித்து வரும் குற்றங்களைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்பேசிகளில் அவசர அழைப்புக்காக பிரத்தியேகமான ஒரு விசைமுக குறியீடு (பேனிக் பட்டன்- panic button) கட்டாயமாக இடம்பெற வேண்டும் என அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய முயற்சியை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்த முனைந்துள்ளது.

mobile-phonesஎதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து செல்பேசிகளிலும் இந்த பட்டன் விசை இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படவிருக்கின்றது.

#TamilSchoolmychoice

அதேவேளையில், இடங்களை அடையாளம் காட்டும் ஜிபிஎஸ் எனப்படும் வரைபட மென்பொருள் தொழில்நுட்பம் அனைத்து செல்பேசிகளிலும் மென்பொருள் உள்ளடக்கமாக கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் இந்திய அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கின்றது.

“தொழில்நுட்பம் என்பது மனித வாழ்க்கையை மேலும் மேம்படுத்த வேண்டியது என்பதால் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், உறுதிப்படுத்துவதிலும் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்” என இதன் தொடர்பில் கருத்துரைத்துள்ள தொலைத் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்

பெண்களுக்கு எதிரான கொடூரமான சில பாலியல் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

உலகின் இரண்டாவது பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா திகழ்கின்றது. கடந்த ஆண்டு அக்டோபரில் செல்பேசிகளில் பயன்பாடு 1 பில்லியன் (ஆயிரம் மில்லியன்) எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக இந்தியத் தொலைத் தொடர்பு வாரியம் அறிவித்திருக்கின்றது.