Home Featured தமிழ் நாடு நாயை வீசியவர்கள் கல்லூரியிலிருந்து இடைக்கால நீக்கம்!

நாயை வீசியவர்கள் கல்லூரியிலிருந்து இடைக்கால நீக்கம்!

858
0
SHARE
Ad

சென்னை – மூன்றாவது மாடியிலிருந்த நாயைத் தூக்கி எறிந்த இரண்டு மாணவர்கள் அவர்கள் பயின்றுவரும் மாதா மருத்துவக் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாயைத் தூக்கி எறிந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்க மூவர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றும் கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று மாதா மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் எஸ்.பீட்டர் தெரிவித்திருக்கின்றார்.

“மாணவர்கள் இருவரும் இவ்வளவு விரைவாக விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கவில்லை” என்றும் டாக்டர் பீட்டர் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

dog-chennai-thrown-treatedபாதிக்கப்பட்ட நாய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்…

தூக்கி எறியப்பட்ட நாயைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதிலும், அந்தக் குற்றத்தைச் செய்த மனித மிருகங்கள் மீது காவல் துறையில் புகார் கொடுத்து, அவர்கள் கைது செய்யப்படுவதற்கும் முக்கிய பங்காற்றிய மிருக நல ஆர்வலம் ஷரவான் கிருஷ்ணன் அந்த நாய்க்கு ‘பத்ரா’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.

மிருக வதைக்கு எதிரான 1960ஆம் ஆண்டு சட்டம் இன்றைய காலத்திற்கு ஒவ்வாதது என்றும் அது மாற்றப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ள ஷரவான் கிருஷ்ணன் அந்த இரண்டு மாணவர்களும், மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.chennai-dog-thrown

நாயைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்த மிருக நல ஆர்வலர் ஷரவான் கிருஷ்ணன்

“அந்த இருவரும் மருத்துவர்களாக பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. ஒரு மிருகத்திடம் இவ்வளவு கொடூரமாகவும், வன்முறையாகவும் நடந்து கொள்ளும் அவர்கள், மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள்?” என்றும் ஷரவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாய் தற்போது ஷரவான் மற்றும் அவரது நண்பர்கள் வசம் இருந்து பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.

“அந்த நாயைக் கண்டுபிடித்து அதனை நெருங்கியதும் அது என்னைப் பார்த்து வாலாட்டியதைக் கண்டபோது எனது இதயமே நொறுங்கிவிடுவது போல் இருந்தது. காரணம், தன்னை ஒரு மனிதன் மாடியிலிருந்து வீசி கொடுமைப் படுத்தியதற்குப் பின்னரும் இன்னொரு மனிதனைப் பார்த்ததும் அவன் மீது தனது கோபத்தைக் காட்டாமல் தனது அன்பை மட்டுமே காட்டும் வண்ணம் அந்த நாய் வாலாட்டியதைப் பார்த்ததும் எனது இதயமே நொறுங்கி விடுவது போல் இருந்தது” என்றும் ஷரவான் இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் உரையாடியபோது தெரிவித்துள்ளார்.

dog-thrown-saved
வசதிகளோடு பராமரிக்கப்படும் ‘பத்ரா’

-செல்லியல் தொகுப்பு