Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: திருநாள் – ஜீவா நடிப்பு அருமை; ஒருமுறைப் பார்க்கலாம்!

திரைவிமர்சனம்: திருநாள் – ஜீவா நடிப்பு அருமை; ஒருமுறைப் பார்க்கலாம்!

967
0
SHARE
Ad

Thirunaal1கோலாலம்பூர் – ஆயுதம் துறந்து, வன்முறை தவிர்க்கும் நாளே ‘திருநாள்’ என்று இன்றைய சூழலுக்குத் தேவைப்படும் நல்ல கருத்தோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவுடி கதாப்பாத்திரத்தில் ஜீவாவையும், எண்ணெய் வழியும் முகத்துடன் பார்ப்பதற்கு சுமாரான பெண்ணைப் போன்ற தோற்றத்தில் நயன்தாராவையும் காட்டியிருக்கிறார்கள்.

வன்முறைக் கூட்டமொன்றில் இருப்பவன் திருந்தி நல்லவனாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் கூட, அவன் வாழ முடியாத வகையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும், பழிவாங்கல்களும் அமைவதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது படம்.

#TamilSchoolmychoice

நடிப்பு

Thirunaal-Tamil-Movie-1‘பிளேடு’ கதாப்பாத்திரத்தில் அச்சு அசல் கட்டப்பஞ்சாயத்துக் கூட்டமொன்றில் இருக்கும் இளைஞரைப் போல் நடித்திருக்கிறார் ஜீவா. வாயில் பிளேடைப் போட்டு கொதப்பி எதிரிகளின் முகத்தில் துப்புவதும், கையை மடித்துவிட்டுக் கொண்டு, கலர் வேட்டியுடன் கெத்தாக தலைவனின் பின்னால் போவதுமாக நடிப்பு அருமை.

அண்மைய காலங்களில் வந்த படங்களில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். ‘ஐயா’ படத்திற்குப் பிறகு இதில் தான் தாவணி போட்டிருக்கிறார். என்றாலும் எலும்பும் தோலுமாகக் காணப்படுவதால் தோற்றத்தில் அவ்வளவு ஈர்ப்பு இல்லை. ஆனால் நடிப்பில் தனது வழக்கமான தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக சரத் லோஹிதாஸ்வா .. அருமையான நடிப்பு.. எதிர்நீச்சல் படத்தில் நந்திதாவின் தந்தையாக நடித்து அசத்தியவர், பின்னர் பாண்டியநாடு படத்தில் வில்லன் வேடம் ஏற்றதில் இருந்து தொடர்ந்து வில்லனாகவே மிரட்டி வருகின்றார்.

நயன்தாராவின் தந்தையாக ஜோ மல்லூரி நடித்திருக்கிறார். ‘கும்கி’ படத்திற்குப் பிறகு தந்தை கதாப்பாத்திரத்தில் மிகவும் ரசிக்க வைக்கின்றார்.

இவர்களோடு, விஜய்டிவி கோபிநாத், கருணாஸ், முனீஸ்காந்த் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

திரைக்கதை 

Thirunaalகதைக்களம் ஏற்கனவே பார்த்து பழகியது தான். பெற்றோர் இல்லாமல் அனாதையாக வளரும் பிளேடை (ஜீவா) அந்த ஊரின் மிகப் பெரிய ரௌடியான நாகா (சரத் லோஹிதாஸ்வா) உடன் வைத்துக் கொள்கிறான். அவனுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறான் பிளேடு. நயன்தாராவுடனான காதலால் ஏற்படும் பிரச்சினையில் நாகாவைப் பிரிந்து வெளியேறுகிறான்.

நல்லவனாகத் திருந்தி வாழ நினைத்தாலும் தன்னை வாழ விடாமல் விரட்டும் நாகாவிடமிருந்து பிளேடு எப்படி தப்பிக்கிறான் என்பதே இடைவேளைக்குப் பிறகான சுவாரசியக் காட்சிகள்.

இந்தக் கதையை தேவையான இடங்களில் விறுவிறுப்பை ஏற்றி, சுவாரசியங்களைக் கூட்டி திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத்.

அதிலும், இடைவேளைக்கு முன்பான அந்த ‘சாக்கு மூட்டை’ திருப்பம் அருமை..

அதோடு, சாக்குப் பை விற்பனை செய்யும் தொழிலில் ஊசி தைப்பதன் நுணுக்கம் முதல் பாலியல் தொழிலாளியை ‘திட்டாத திட்டாத அந்த வார்த்தை சொல்லித் திட்டாத’ பாடல் வரை படத்தில் பல இடங்களில் சின்னச் சின்ன விசயங்கள் கூட நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

Thirunaal2அதேநேரத்தில், ஜீவா – நயன்தாரா காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருக்கலாம். அந்தக் காட்சிகளில் மட்டும் திரைக்கதை வேகம் குறைந்து சலிப்பை ஏற்படுத்துகின்றது.

ஒளிப்பதிவு, இசை

Nayanthara-Stills-from-Thirunaal-Movie-12மகேஸ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் கிராமப்புறமும், அதனைச் சுற்றிய பகுதிகளும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

மொத்தத்தில், திருநாள் – ஜீவா நடிப்பு அருமை; ஒருமுறைப் பார்க்கலாம்!

– ஃபீனிக்ஸ்தாசன்