Home Featured நாடு 2 பேரணிகளையும் நிறுத்த முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு!

2 பேரணிகளையும் நிறுத்த முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு!

756
0
SHARE
Ad

KL High Court

கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5 மற்றும் சிவப்பு சட்டை பேரணிகளைத் தடுத்து நிறுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என மூன்று வணிக அமைப்புகள் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

பேரணிகள் நடத்தப்படுவதற்கு எதிராக தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை நேற்று நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நந்தபாலன் பிறப்பித்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென பெர்சே 5 அணியினரும், சிவப்பு சட்டை அணியினரும் இணைந்து எதிர்த்தனர் என்பது குறித்து தான் ஆச்சரியப்படுவதாகவும் நீதிபதி நந்தபாலன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

நேற்று மாலை 7.20 மணியளவில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

மெர்டேக்கா சதுக்கத்தைச் (டத்தாரான் மெர்டேக்கா) சுற்றியுள்ள இடங்களில் வணிகம் நடைபெற இடையூறு ஏற்படும் என்பதால், இரண்டு பேரணிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என மூன்று வணிக அமைப்புகள் வழக்கு தொடுத்திருந்தன.

பேரணிகளைத் தடை செய்யும், அவை சட்டபூர்வமானதல்ல என அறிவிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, தங்களின் விண்ணப்பத்தில் வணிக இயக்கங்கள் செய்திருக்கும் சில சட்டத் தவறுகளாலும் அவர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்தப் பேரணிகள் குறித்து அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தாலும், இந்த வணிக அமைப்புகள் இறுதி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியதையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மலேசிய அரசியல் சாசனத்தில் இது போன்ற பேரணிகள் சுதந்திரமாக நடைபெற இடமிருப்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, ஆனால் அவற்றை எங்கே நடத்துவது, எப்படி நடத்துவது என்பது போன்ற முடிவுகளை எடுக்கும் அதிகாரம் காவல் துறை போன்ற அமைப்புகளுக்கே உண்டு என்றும், வணிக அமைப்புகளுக்கு கிடையாது என்றும் தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி பேரணிகளைத் தடை செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்தார்.