Home நாடு புதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் மறுவிசாரணை செய்யப்படும் – இஸ்மாயில்...

புதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் மறுவிசாரணை செய்யப்படும் – இஸ்மாயில் ஓமார் 

922
0
SHARE
Ad

Ismail-Omar-IGP-Sliderகோலாலம்பூர், மார்ச் 23 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் காரணமாகத்தான் தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தான் தயாரித்ததாக வழக்கறிஞர் சிசில் ஆப்ரஹாம் ஒப்புக் கொண்டதாக, பாலாவின் வழக்கறிஞர் அமெரிக் சிடு  கடந்த மார்ச் 16 ஆம் தேதி  நடைபெற்ற வழக்கறிஞர் மன்றத்தின் (பார் கவுன்சில்) ஆண்டுக் கூட்டத்தில் தெரிவித்ததிலிருந்து, நாட்டில் பல தரப்புகளிலிருந்து மங்கோலிய அழகி அல்தான்துன்யாவின் கொலையைப் பற்றிய பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் தேசிய காவல்துறைத்  தலைவர்  இஸ்மாயில் ஒமார், இவ்வழக்கு ஏற்கனவே காவல்துறையால் தீர விசாரிக்கப்பட்டு, அதன் புலனாய்வு அறிக்கையும் மேலிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என்றும், இக்கொலையை மறுவிசாரணை செய்ய வேண்டுமெனில் புதிய ஆதாரங்களை மக்கள் கொண்டுவர வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

சரவாக் ஊழல் தொடர்பான ஒளிநாடா 

#TamilSchoolmychoice

சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ தாயிப் மாஹ்முட் மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட அந்த சர்ச்சைக் குரிய ஒளி நாடா பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“காவல் துறை அந்த ஒளி நாடா தொடர்பான அனைத்துப் புகார்களையும் ஆராய்ந்து வருகிறது. ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே அவ்விவகாரம் ஊழல் தொடர்பானதாக இருக்கும் பட்சத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு விசாரணையைத் தொடரும்” என்று  இஸ்மாயில் ஒமார் தெரிவித்தார்.