Home Featured நாடு ஜெனிவா உலக சுகாதார மாநாட்டில் டாக்டர் சுப்ரா

ஜெனிவா உலக சுகாதார மாநாட்டில் டாக்டர் சுப்ரா

823
0
SHARE
Ad

subra-masean

ஜெனிவா – ஐக்கிய நாட்டு மன்றத்தின் உலக சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் 70-வது உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்குத் தலைமை தாங்கி சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஜெனிவா வந்தடைந்துள்ளார்.

எதிர்வரும் மே 22-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த உலக சுகாதார மாநாடு உலகெங்கிலும் இருந்து 194 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ளும் உலகின் மிக உயரிய சுகாதாரம் தொடர்பான அமைப்பாகும்.

இந்த மாநாட்டில் “தொடர்ச்சியான மேம்பாட்டுக்கான காலகட்டத்தில் சுகாதாரத்துக்கான மேலும் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்குவது” என்ற தலைப்பில் டாக்டர் சுப்ரா உரை நிகழ்த்தவிருக்கிறார்.

ஜெனிவாவில் நடைபெறும் உலக சுகாதார மாநாட்டை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு செய்தியில் “2030-ஆம் ஆண்டு வரையிலான இலக்கைக் கொண்டுள்ள தொடர்ச்சியான சுகாதார மேம்பாடு என்பது மேலும் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஊக்குவிப்பு காரணியாகத் திகழும். சிறந்த உடல் நலம் மூலமாக விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு, சக்தி ஆற்றல், சுற்றுச் சூழல், பொருளாதாரம் போன்ற மற்ற துறைகளில் உற்பத்தி ஆற்றலைப் பெருக்க முடியும் என்ற சித்தாந்தக் குறிக்கோளோடு இந்த உலக சுகாதார மாநாடு நடைபெறுகிறது” என்று கூறியிருக்கிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைத்துவ மாற்றம்

World health organisation-2017-logo

இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குநர் மாற்றம் நடைபெறும் என்பதையும் தனது செய்தியில் சுட்டிக் காட்டியிருக்கும் டாக்டர் சுப்ரா இந்த முறை எத்தியோப்பியா, பிரிட்டன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதி ஒருவர் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏற்பார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

காமன்வெல்த் சுகாதார அமைச்சர்கள் மாநாடு

நாளை ஞாயிற்றுக்கிழமை 21 மே முதல் ஜெனிவாவில் தொடங்கும் 29-வது காமன்வெல்த் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டிலும் டாக்டர் சுப்ரா மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்து கொள்கிறார்.

மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தரப்பட்ட சுகாதார சவால்களை சமாளிக்க தொடர்ச்சியான, எதையும் தாங்கி நிலைத்திருக்கக்கூடிய சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான அணுகுமுறைகளை மலேசியா இந்த மாநாடுகளில் வலியுறுத்தும் என்றும் டாக்டர் சுப்ரா தனது செய்தியில் தெரிவித்திருக்கிறார்.