குரல்வழி உள்ளிடும் வசதியை, ஆங்கிலம் உட்பட, பல மொழிகளில் கூகுள் ஏற்கனவே வழங்கி இருந்தது. இன்று தமிழோடு, இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பேசப்படும் 20 கூடுதல் மொழிகளிலும் இந்த வசதியைச் சேர்த்துள்ளது. இந்தச் சேர்க்கையோடு, 100க்கும் மேற்பட்ட மொழிகளில் குரல்வழி உள்ளிடும் வசதி செயல்படுகின்றது.
செல்லினம் வழி தமிழில் தட்டெழுதும் பயனர்களுக்குக் கிடைக்கும் நற்செய்தி என்னவெனில், செல்லினத்தைக் கொண்டே நீங்கள் கூகுளின் வசதியைப் பயன்படுத்திக் குரல்வழித் தமிழில் உள்ளிடலாம். இதற்கான கட்டமைப்பு ஏற்கனவே செல்லினத்தில் இருப்பதால், புதிய பதிகையினை நீங்கள் தரவிரக்கம் செய்யத் தேவை இல்லை.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழை உங்கள் குரல் வழி உள்ளிடும் மொழியாக அமைக்க வேண்டியது மட்டுமே. இதனை நமது சிவ தினகரன் கீழ்க்காணும் குறிப்புகளில் விளக்குகிறார். செய்து பாருங்களேன்?
தமிழில் தட்டெழுதத் தயங்கியவர்கள், இனி பேசியே தங்கள் எண்ணங்களை எழுத்துகளாக்கலாம்.
சிவ. தினகரன்:
நெடு நாட்களாக நாம் ஆவலுடன் காத்திருந்த குரல்வழித் தமிழ் உள்ளீடு இரு நாள்களுக்கு முன் வந்தே விட்டது. இப்போது ஆன்ட்ராய்டில் பதிப்பு மட்டும் வழங்கியுள்ளார்கள். கூகுள் நிறுவனத்தின் செயலி என்பதால் Play Store ல் Gboard தேர்வு செய்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே நமது பயனர்கள் எல்லாம் செல்லினத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் என தட்டச்சு செய்து பழக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது கூடுதலாக ஒரு விசைப்பலகையா? அதுவும் ஒவ்வொரு முறையும் மாறி மாறி பயன்படுத்துவதா? கூகுள் வழங்கும் புது வசதியினை இடற்பாடின்றி எப்படி பெறுவது? என்றெல்லாம் இனி பயனர்கள் தடுமாற்றம் கொள்ளத் தவையில்லை.
படிநிலைகள்
ஓரிரு நொடிப் பொழுதில் சில படி நிலைகளில் நாம் செல்லினத்தில் இருந்தே இவ்வசதியினை பெறலாம். ஏற்கனவே செல்லினம் விசைப் பலகையில் ஒலி வாங்கி (மைக்) போன்ற குறியீடு இருக்கும். அதனை அழுத்தினால் அது நேராக கூகுளின் Voice To Text வசதி இருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதனை சொடுக்கியதும் இடப்புறமாக Settings Symbol ஐக் காணலாம். அதனை தேர்வு செய்யுங்கள்.
ஒலி வழி தமிழ் உள்ளீடு முறையில் காற்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் ஆகியன தட்டச்சு செய்வதற்கு மீண்டும் நாம் விசைப்பலகைக்கு மாற வேண்டியுள்ளது. இதெற்கென தனியே இனி விசைப்பலகை ஏதும் நிறுவத் தேவையில்லை.
இனி விரல் வழி உள்ளீடும் சரி குரல் வழி உள்ளீடும் சரி செல்லினத்திலேயே உங்களுக்கு கிடைக்கும்.
– சிவ. தினகரன், சென்னை -69