Home நாடு “தேசிய முன்னணிக்கு மஇகா! பக்காத்தானுக்கு ஹிண்ட்ராப்”

“தேசிய முன்னணிக்கு மஇகா! பக்காத்தானுக்கு ஹிண்ட்ராப்”

1194
0
SHARE
Ad

Hindraf-Waytha-logo-Featureசிரம்பான் – தேசிய முன்னணி கூட்டணியில் ஒரே இந்தியர் அரசியல் கட்சியாக மஇகா திகழ்வது போன்று, எதிர்க்கட்சிகளின் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம் பெற ஹிண்ட்ராப் எண்ணம் கொண்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை (25 நவம்பர் 2017) சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி “இருப்பினும் சங்கப் பதிவதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட எங்களின் அரசியல் கட்சியாக மாறும் விண்ணப்பத்தை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என நம்புகிறோம். எனவே பக்காத்தானின் மற்ற உறுப்பியக் கட்சிகள் அவர்கள் கடந்த பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற தொகுதிகளில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றும் நம்புகிறோம்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பக்காத்தான் உறுப்பியக் கட்சிகள் கடந்த பொதுத் தேர்தலில் வென்றெடுத்த தொகுதிகள் எங்களுக்கு வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

hindraf-logo-நேற்று நடந்த ஹிண்ட்ராப் பேரணியின் 10-ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் ‘தேசிய முன்னணிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்பதைக் குறிக்கும் விதமான ‘சீரோ வோட் ஃபோர் பிஎன்’ (Zero Vote for BN) என்ற பிரச்சாரமும் தொடங்கப்பட்டது.

ஹிண்ட்ராப் 2007-ஆம் ஆண்டு நடத்திய மாபெரும் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக், டத்தோ சைட் இப்ராகிம், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார், அமனா கட்சித் தலைவர் முகமட் சாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அண்மையில் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீரைச் சந்தித்த ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி, பக்காத்தானில் இணைவதற்கான விருப்பத்தைத் தெரிவித்தார்.

pakatan harapan-logoஎனினும், சமூக இயக்கமாகத் தற்போது பதிவாகியிருக்கும் ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறுவதற்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தை சங்கப் பதிவகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

அடுத்து பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஹிண்ட்ராப்பின் விண்ணப்பத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால், பக்காத்தானின் உறுப்பியக் கட்சிகளின் சின்னங்களின் கீழ் மற்றும் பக்காத்தான் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட ஹிண்ட்ராப் உத்தேசித்துள்ளது.

ஆனால், பக்காத்தான் கூட்டணியின் பதிவே இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குள் அந்தக் கூட்டணியும், அதன் சின்னமும் சங்கப் பதிவகத்தால்  அங்கீகரிக்கப்படுமா என்ற ஐயப்பாடும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலை தொடர்ந்தால், பக்காத்தானில் ஹிண்ட்ராப் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஜசெக, பிகேஆர், பெர்சாத்து, அமானா போன்ற கட்சிகளின் சின்னங்களின் போட்டியிடும் சூழ்நிலைக்கு ஹிண்ட்ராப் தள்ளப்படும்.