இதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை பிரதமரும் அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைவர் கொள்கை உரையோடு அம்னோ ஆண்டுப் பேராளர் மாநாடு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், தேசிய முன்னணி அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் மற்ற தேசிய முன்னணி அங்கத்துவக் கட்சித் தலைவர்களோடு இன்றைய மாநாட்டில் கலந்து கொண்டார்.
இன்றைய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை குறித்து மாநாட்டு தொடக்க விழாவுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்த டாக்டர் சுப்ரா, பிரதமரின் உரை நடப்பு அரசியலுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பாக இருந்ததாகவும், காலத்துக்கு ஏற்ற வகையில் பொருத்தமானதாகவும், எல்லா அரசியல் விவகாரங்களுக்கும் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும் வழங்குவதாகவும் இருந்தது என்றும் கூறினார்.


தேசிய முன்னணி அரசாங்கம் பல்வேறு அரசாங்கத்தின் அமைப்புகள், திட்டங்கள் மூலம் நாட்டுக்குக் கொண்டுவந்திருக்கும் நன்மைகள், மேம்பாடுகள் குறித்து பிரதமரின் உரை தெளிவாக விளக்கியதாகவும் டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.
அதே வேளையில் விரைவில் நடைபெறவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலை நோக்கி அம்னோவும், தேசிய முன்னணி அங்கத்துவக் கட்சிகளும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும், பொதுத் தேர்தல் வெற்றிக்கான தன்னம்பிக்கையைக் காட்டுவதாகவும் பிரதமரின் உரை அமைந்திருந்தது என டாக்டர் சுப்ரா மேலும் சுட்டிக் காட்டினார்.
எதிர்க்கட்சிகளும் தற்போது எதிர்கட்சிக் கூட்டணியில் ஐக்கியமாகியுள்ள அம்னோவின் முன்னாள் தலைவர்களும் கூறிவரும் குற்றச்சாட்டுகள், மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களை ஆகியவற்றை முறியடிக்கும் வகையில் பிரதமரின் உரை ஆணித்தரமாக அமைந்திருந்தது என்றும் டாக்டர் சுப்ரா புகழ்ந்துரைத்தார்.