ரெம்பாவ் நகரின் அருகில் உருவாகியுள்ள புக்கிட் பெர்தாம் தோட்டத் தமிழ்ப் பள்ளிதான் அது!
அதுமட்டுமின்றி, ஸ்ரீ செண்டயான் தமிழ்ப் பள்ளியின் அழகான, சிறந்த வடிவமைப்பையும், மிக உன்னதமான அதிநவீன கற்பிக்கும், கற்றல் வசதிகளையும் கொண்டிருக்கும் சூழலையும் பார்த்து நாட்டிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளி இதுதான் என்ற புகழாரத்தையும் சூட்டியிருக்கிறார் பிரதமர்.
இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு நில மேம்பாட்டாளர் மெட்ரிக்ஸ் நிறுவனத்தை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளச் செய்ததில் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான் மேற்கொண்ட முயற்சிகளையும் நஜிப் பாராட்டினார்.


“மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் இரண்டு முக்கியத் தேவைகளை மந்திரி பெசார் முகமட் ஹசான் நன்கு உணர்ந்துள்ளார். தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் என இரண்டு அம்சத் தேவைகள்தான் அவை. மற்றவை எல்லாம் இந்திய சமூகத்திற்குக் கிடைக்கக் கூடிய கூடுதல் சலுகைகளாகும்” என்றும் நஜிப் நேற்று நடந்த ஸ்ரீ செண்டயான் பள்ளித் திறப்பு விழாவில் உரையாற்றும்போது கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், கல்வி துணை அமைச்சர்கள் டத்தோ ப.கமலநாதன் மற்றும் சோங் சின் வூன், ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின், ஆகியோரும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாணிக்கம் லெட்சுமணன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதி நவீன அம்சங்கள் – வசதிகள்
1951-ஆம் ஆண்டில் லிங்கி நகரில் உருவானது இந்தப் பள்ளி. மரத்தாலான 10 மீட்டர் 7 மீட்டர் அளவில் ஒரே ஒரு வகுப்பறையோடு செயல்பட்ட இந்தப் பள்ளியில் அப்போது 47 மாணவர்கள் இருக்க ஒரே ஓர் ஆசிரியர்தான் இந்தப் பள்ளியில் பணியாற்றினார்.
தனக்கு வழங்கிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் நஜிப் தனது தலைமையின் கீழ் தேசிய முன்னணி எந்த ஓர் இனத்தையும் புறக்கணிக்காது என்றும் அனைவரையும் ஒருங்கிணைத்து சேவைகளை வழங்கும் என்றும் உறுதி கூறினார்.
“நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் சுமார் 45 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த செலவழிக்கப்பட்டுள்ளது. இது இந்திய சமூகத்தின் மீதான எங்களின் கடப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. எங்களின் இந்தப் பணிகள் தொடரும் என்பதையும் இந்த வேளையில் உறுதி கூறுகிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா வலியுறுத்தினார்.
கற்பிக்கும் மற்றும் கற்றல் அம்சங்களில் தமிழ்ப் பள்ளிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட டாக்டர் சுப்ரா, ஸ்ரீ செண்டயான் தமிழ்ப் பள்ளி நாட்டிலேயே சிறந்த, மிக அழகான தமிழ்ப் பள்ளி என்றும் வர்ணித்தார்.