Home நாடு பக்காத்தானின் இந்தியர்கள் குறித்த தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு

பக்காத்தானின் இந்தியர்கள் குறித்த தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு

1058
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புதன்கிழமை (14 மார்ச் 2018) கோலாலம்பூர் செந்தூல் கறி ஹவுஸ் உணவகத்தில் பக்காத்தான் ஹராப்பான் இந்தியத் தலைவர்கள் ஒன்று கூடி பக்காத்தான் ஹராப்பானின் இந்தியர்களுக்கான பொதுத் தேர்தல் சிறப்பு கொள்கை அறிக்கையினை வெளியிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து அந்த அறிக்கையில் கண்டிருக்கும் அம்சங்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்து வருவதாக பக்காத்தான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை நடைபெற்ற இந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் கெஅடிலான், ஜ.செ.க கட்சிகளின், இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஹிண்ட்ராப்பைப் பிரதிநிதித்து அதன் தலைவர் பி.வேதமூர்த்தியும், ‘மீரா’ கட்சியைப் பிரதிநிதித்து அதன் தலைவர் ராஜரத்தினமும் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களையும் அழைக்கப்பட்ட கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (படம்), நாட்டு மக்களின் நலனுக்காகப் பக்காத்தான் ஹராப்பான் 60 முக்கிய வாக்குறுதிகளையும், பெல்டா, இந்தியர்கள், மகளிர், இளைஞர், மற்றும் முதியோர் ஆகியோரின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் வண்ணம் 5 சிறப்பு பிரிவுகளையும் பக்காத்தான் ஹராப்பானின் இந்த 14வது பொதுத் தேர்தல் வாக்குறுதிகள் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்,

குறிப்பாக இந்தியர் பொருளாதார மேம்பாட்டுக்கு 400 கோடி சிறப்பு நிதி, மற்றும் 100 நாட்களில் இந்தியர்களின் அடையாளப் பத்திர விவகாரத்திற்குத் தீர்வு காண்பது பற்றியும் அவர் விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் குழந்தைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்படுதல் குறித்தும், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் தமிழ்ப் பள்ளிகள் மற்றும் அரசாங்கத் தமிழ் இடைநிலைப்பள்ளி குறித்தும் உரையாற்றினார்கள்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ இந்த வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியமானவை. இது குறித்து பல விவாதங்கள், ஆய்வுகள், பட்டறைகளை நடத்தி, சமுதாயத்தின் பல தரப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட சந்திப்புகளின் வழி தீட்டப்பட்ட கொள்கைகள் ஆகும் என்றார்.

பக்காத்தான் கொள்கை அறிக்கையை வரவேற்றுப் பேசிய ஹிண்ட்ராப் வேதமூர்த்தி, “இது ஒரு நல்ல தொடக்கம், இதில் கண்டுள்ள பல அம்சங்கள் நாட்டுக்கும் இந்தியர்களுக்கும் மிகுந்த நன்மையளிக்க வல்லது. கடந்த 60 ஆண்டுகளில் பாரிசான் மறந்துவிட்ட ஒரு சமுதாயம் குறித்துப் பக்காத்தான் ஹராப்பான் விரிவாகத் தேர்தல் கொள்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளது” என வரவேற்றார். இந்தியர்கள் தங்களுக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.

A.Rajarathnamமீரா தலைவர் ராஜரத்தினம் (படம்) “இதில் காணப்படும் உறுதி மொழிகளை ம.இ.கா வினர் உதட்டளவில் கூட இன்றைய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் முணுமுணுக்க  மாட்டார்கள். அவர்கள் முன் வைத்ததும் இல்லை. ஆக, நாம் நன்றாக இருக்க வேண்டும், நம் பிள்ளைகளின் எதிர்காலம் இந்நாட்டில் சிறக்க வேண்டும் என்றால் ஒட்டு மொத்த இந்தியர்களின் வாக்குகளும் பாக்காதான் ஹராப்பானுக்கு இந்தியர்கள் வழங்க வேண்டும்” என்றார்.